Saturday, February 21, 2015

திருவெண்காட்டில் விநாயகர் சதுர்த்தி விரத அனுஸ்டானங்கள் ! ! ! ( 22.02.2015 )


திருக்கயிலை மலையில் சிவபெருமான் - அம்பிகை இருவரின் திருப்பார்வை கடாட்சத்தில் இருந்து தோன்றி அருளியவர் பிரணவ சுவரூபரான ஸ்ரீவிநாயகக் கடவுள்.


'விநாயகச் சதுர்த்தி' என்பது விநாயகக் கடவுளின் தோற்றத்தைக் குறிக்க வந்தது அன்று. இறைவன் தோற்றம் - மறைவு இவைகளைக் கடந்த ஆதி காரணன். ஸ்ரீவிநாயகர் சிவப்பரம்பொருளின் திருக்குமாரர் என்று குறிப்பது உபசார மார்கம் கருதியே.


திருவெண்காடு திவ்வியநாம சேஷ்திரத்தில் மூலமூர்த்தியாக வீற்றிருந்து திருவருள் பாலித்துக்கொண்டிருக்கும் ஸ்ரீ அம்பலவாணர் சித்தி விக்கினேஸ்வரப்பிள்ளையார். 

பரம்பொருளான இறைவன் ஆன்மாக்கள் உய்வு பெரும் பொருட்டு எடுத்தருளிய மற்றொரு ஒப்பற்ற வடிவமே ஸ்ரீவிநாயகப் பெருமானின் திருவடிவம். இப்புரிதலோடு விநாயக மூர்த்தியின் திருஅவதாரத்தைக் கொண்டாடி மகிழும் உன்னத மரபே 'ஸ்ரீவிநாயக சதுர்த்தி'.

யானையை அடக்கும் கருவிகள் பாசமும் அங்குசமும். தனக்கு மேல் ஒரு நாயகன் இல்லாத தன்மையைக் குறிக்கும் வகையில் ஸ்ரீவிநாயகர் திருக்கரங்களில் பாசம் - அங்குசம் இவைகளோடு திருக்காட்சி அளித்து அருள்கிறார்.


கமண்டலத்தில் அடைப்பட்ட காவிரியை விடுவித்து மீண்டும் பிரவகிக்குமாறுத் திருவிளையாடல் புரிந்து அகத்தியருக்கு அருள் புரிந்தார். மகாபாரதத்தைத் தன் திருக்கரங்களால் எழுதியருளினார். முருகக் கடவுளுக்கு வள்ளியை மணம் செய்வித்து அருளினார். ஔவைக்குப் பேரருள் புரிந்தார்.

அம்மட்டோ!!! திரிபுர சம்ஹார சமயத்தில், தம்மை வணங்காமல் செல்ல முனைந்த தேவர்களுக்கு அறிவுறுத்தும் பொருட்டு (சிவனார் மகிழும் வண்ணம்) சிவபெருமானின் திருத்தேரின் அச்சையே முறித்து அருளினார்.


நம்பி ஆண்டார் நம்பிக்கு மூவர் பாடியருளிய தேவாரப் பதிகங்களின் இருப்பிடத்தைக் காண்பித்து அருள் புரிந்தார்.

அணுக மிக எளிதாகவும், யாவர்க்கும் உகந்த மூர்த்தியாகவும் விளங்கும் ஸ்ரீவிநாயகப் பெருமானை அருகம்புல்லால் அர்ச்சித்து நலன்கள் யாவும் கிடைக்கப் பெறுவோம் (ஓம் ஸ்ரீபால கணபதியே நமக!!!)

ஓம் கம் கணபதயே நமஹ...!!

தென்னாடுடைய சிவனே போற்றி…!
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி…! போற்றி…!!
மேன்மைகொள் சைவநீதி . . . !
விளங்குக உலகமெல்லாம் . . . !
இன்பமே சூழ்க . . . !
எல்லோரும் வாழ்க . . . ! 


 "திருச்சிற்றம்பலம்" '' திருச்சிற்றம்பலம்'' "திருச்சிற்றம்பலம்'