Saturday, May 9, 2015

திருவெண்காட்டில் ஸ்ரீமத் ஆனந்த நடராஜ மூர்த்திக்கு சித்திரை திருவோண மஹா அபிஷேகம் ! ! ! 10.05.2015

திருவெண்காடு ஸ்ரீ சித்திவிநாயகர் தேவஸ்தானம்
 மண்டைதீவு - இலங்கை
சிவகுடும்பம்


திருவெண்காடு சுவேதாரணியம்பதி பூலோக கைலாய புண்ணிய திவ்விய நாம சேஷ்திர பொற்சபையில் (பொன்னம்பலம்) வீற்றிருந்து ஆனந்த தாண்டவம் புரியும் அருள்மிகு ஸ்ரீ சிவகாம சுந்தரி ஸமேத ஸ்ரீமத் ஆனந்த நடராஐமூர்த்தி , ஸ்ரீ சித்தி விநாயகப் பெருமான் , ஸ்ரீ பாலசுப்பிரமணியர் , ஸ்ரீ மாணிக்கவாசக சுவாமிகள்

தேவர்கள் தினமும் ஆறு முறை நடராஜருக்கு அபிஷேகம் செய்து வழிபடுவதாக ஐதீகம். அவர்களுக்கு ஒருநாள் என்பது, பூலோகத்தில் ஒரு ஆண்டுக்குச் சமமானது. இதன் அடிப்படையில், சிவன் கோயில்களில் ஆண்டுக்கு ஆறுமுறை நடராஜர் அபிஷேகம் நடக்கிறது. 


மார்கழி திருவாதிரையன்று அதிகாலையிலும், மாசி வளர்பிறை சதுர்த்தசி திதியன்று காலையிலும், சித்திரை திருவோணத்தன்று உச்சிக் காலத்திலும், ஆனி உத்திரத்தன்று மாலையிலும், ஆவணி வளர்பிறை சதுர்த்தசியில் இரவிலும், புரட்டாசி வளர்பிறை சதுர்த்தசியன்று அர்த்த ஜாம பூஜையின் போதும் அபிஷேகம் நடைபெறும். 


இதில் சித்திரை திருவோண அபிஷேகம் வரும் மே 10, மதியம் திருவாலங்காடு, சிதம்பரம், மதுரை, திருநெல்வேலி, குற்றாலம் உள்ளிட்ட பஞ்ச சபைகளிலும், திருவெண்காடு மண்டைதீவு இலங்கையில் உள்ள பொன்னம்பல பொற்சபையிலும் மற்றும் ஏனைய சிவாலயங்களில் உள்ள நடராஜர் சந்நிதியிலும் சிறப்பாக நடைபெறும்.

சித்திரைத் திருவோணம்
அன்றுதான்

அம்பலத்தாடும் ஐயனுக்கு
ஆனந்த கூத்தனுக்கு
இக பர சுகம் அருளும் நாதனுக்கு
ஈகை செம்மலுக்கு
உலகெலாம் உணர்ந்து ஓதற்குரியவனுக்கு
ஊழி நாதனுக்கு
என்னப்பன் என்தாயனவனுக்கு
ஏனக் குருளைக்கு அருளியவருக்கு
ஐந்தொழில் புரியும் அரசனுக்கு
ஒப்பிலா மணிக்கு
ஓங்கார வடிவானவனுக்கு
ஔடதமாய் காப்பவனுக்கு

தென் தில்லை மன்றில் பொற்சபையில் இடது பதம் தூக்கி ஆடும் ஆனந்த நடராச பெருமானுக்கு தேவர்கள் செய்யும் உச்சிக்கால அபிஷேகம். மானிடர்களாகிய நம்முடைய ஒரு வருடம் தேவர்களுக்கு ஒரு நாள். அவர்கள் செய்யும் ஆறு கால பூஜையே அம்பலவாணருக்கு நடைபெறும் ஆறு அபிஷேகங்கள்.


சித்திரை ஓணமும், சீரானியுத்திரமாம்
சத்ததனு ஆதிரையும் சார் வாளும் -பத்திமிகு
மாசியரி கன்னி மருது சதுர்த்தசி மன்
றீசர பிடேக தினமாம். 

ஸ்ரீ நடராஜபெருமானின் 6  அபிஷேக தினங்கள்

எமது ஒருவருடமே தேவர்களின் ஒருநாளாகும். எமக்கு எவ்வாறு சிவாலயங்களில் 6 கால பூஜை ஆகமங்களில் விதிக்கப்பட்டதோ அவ்வாறே தேவர்களும் சிவபெருமானை 6 காலங்களும் பூஜித்து அருள் பெறுகின்றனர். அந்த 6 காலங்களுமே ஆனந்த நடராஜ மூர்த்தியின் 6 அபிஷேக  தினங்களாகும். இந்தத் தினம் தவிர வேறு எந்த நாட்களிலும் நடராஜருக்கு அபிடேகம் நடப்பதே இல்லை. அவையாவன…

1, மார்கழி மாதம் திருவாதிரை நட்சத்திரம்,- தேவர்களின் அதிகாலை பூஜை, (தனுர்மாத பூஜை),- சிறப்பு அபிசேகம் , நடராஜர் உற்சவம்

2, மாசி மாதம் வளர்பிறை சதுர்த்தசி திதி - தேவர்களின் காலை சந்தி பூஜை,-அபிசேகம் மட்டும்.

3, சித்திரை மாதம் திருவோண நட்சத்திரம் – தேவர்களின் உச்சிக்கால பூஜை,- அபிசேகம் மட்டும்.

4, ஆனி மாதம் உத்திர நட்சத்திரம் – தேவர்களின் சாயங்கால பூஜை.- சிறப்பு அபிசேகம் , நடராஜர் உற்சவம்.

5, ஆவணி மாதம் வளர்பிறை சதுர்த்தசி திதி - தேவர்களின் இரண்டாம் கால பூஜை,- அபிசேகம் மட்டும்.

6, புரட்டாசி மாதம் வளர்பிறை சதுர்த்தசி திதி – தேவர்களின் அர்த்தஜாம பூஜை.- அபிசேகம் மட்டும்.


ஆகிய ஆறு தினங்களே மன்றினில் ஆடும் மன்னனுக்கு உரிய அபிஷேக தினங்கள்.

சித்திரை திருவோண தினமான அன்று தில்லையில் அம்பலவாணர் சித் சபையிலிருந்து பொற்சபைக்கு எழுந்தருளி மாலையில் அபிஷேகம் கண்டருளுகின்றார். மாலை சுமார் 6 மணிக்கு துவங்கும் அபிஷேகம் இரவு 9 மணி வரை நடக்கின்றது. உண்மையாக நதியாகவே பாய்கின்றன ஐயனுக்கும் அம்மைக்கும் அபிஷேக திரவியங்கள். மற்ற திருத்தலங்களில் உச்சி காலத்தில் அபிஷேகம் நடைபெறுகின்றது.

ஐயனின் ஆனந்த தரிசனம் கண்டோம் இனி அவர் ஆடும் ஐந்து சபைகள் எதுவென்று பார்ப்போம்.



1.சிதம்பரம் - பொன்னம்பலம் - கனக சபை - ஆனந்த தாண்டவம்.

2.மதுரை - வெள்ளியம்பலம் - ரதஜ சபை - சந்த்யா தாண்டவம்
 (பாண்டிய மன்னனுக்காக கால் மாறி ஆடிய ஆட்டம்)
3.திருநெல்வேலி - தாமிராம்பலம் - தாமிர சபை - முனி தாண்டவம்
4.திருக்குற்றாலம் - சித்திரம்பலம் - சித்ர சபை - திரிபுர தாண்டவம்
5.திருவாலங்காடு - மணியம்பலம் - ரதன சபை - ஊர்த்துவ தாண்டவம்
 ( காளியை தோற்கடிக்க காலை வானை நோக்கி உயர்த்தி ஆடிய ஆட்டம்)

* ஆறாவது சபையாக 
6.திருவெண்காடு - பொன்னம்பலம் - பொற்சபை - ஆனந்த தாண்டவம்
(மண்டைதீவு - இலங்கை)


வேதங்களாட மிகுவாக மாதல்
கீதங்களாடக் கிளரண்ட மேழாடப்
பூதங்க ளாடப்புவன முழுதாட
நாதங் கொண்டாடினான் ஞானான்ந்த கூத்தே!

என்றபடி சகல புவனங்களையும் ஆட்டுவிக்கும் ஆனந்த கூத்தனின் அருள் அபிஷேகம் கண்டு நன்மையடைவோமாக.



ஓம் கம் கணபதயே நமஹ...!!

தென்னாடுடைய சிவனே போற்றி…!
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி…! போற்றி…!!
மேன்மைகொள் சைவநீதி . . . !
விளங்குக உலகமெல்லாம் . . . !
இன்பமே சூழ்க . . . !
எல்லோரும் வாழ்க . . . ! 


 "திருச்சிற்றம்பலம்" '' திருச்சிற்றம்பலம்'' "திருச்சிற்றம்பலம்''