Monday, July 6, 2015

திருவெண்காட்டில் வினை தீர்க்கும் விநாயகர் வழிபாடு ! ! ! ( சிறப்புக் கட்டுரை )


துதிக்கையில் அருள்வான் துதிக்கையான்;  வினைகளைத் தீர்க்க வந்தவர் விநாயகர்;எறும்பு முதல் யானை வரை விநாயகர் அம்சம்;அறுகம்புல் முதல் அரச மரம் வரை விநாயகர் இருப்பிடம்;விலங்கு முதல் தேவர் வரை விநாயகர் திருவுருவம்;

திருமுறைகளில் விநாயகர்
'காணாபத்யம்’ என்னும் கணபதி வழிபாடு அறு வகைச் சமயங்களில் முதலாவது. இந்துக்கள், சமணர்கள், பௌத்தர்கள் யாவரும் விநாயகரை வழிபடுகிறார்கள். உலகெங்கும் விநாயகர் வழிபாடு உள்ளது. 'தனது அடி வழிபடும் அவர் இடர் கடிகணபதி’ என்று திருஞானசம்பந்தர், துன்பம் போக்கும் கடவுளாகக் கணபதியைப் பாடுகிறார். ஆம்! முழுமுதற் கடவுளாம் விநாயகரைச் சரணடைவதும் வழிபடுவதுமே சகல துன்பங் களுக்குமான பரிகாரமாக அமையும்.

திருவெண்காடு ஸ்ரீ சித்திவிநாயகர் தேவஸ்தானம்
 மண்டைதீவு - இலங்கை


"திருவெண்காடு  சுவேதாரணியம்பதி பொன்னம்பலம் பூலோககைலாய புண்ணிய திவ்வியநாம சேஷ்திரத்தில் மூலமூர்த்தியாக வீற்றிருந்து திருவருள் பாலித்துக்கொண்டிருக்கும் ஸ்ரீ அம்பலவாணர் சித்தி விக்கினேஸ்வரப் பிள்ளையார்." 
அப்பரும் சுந்தரரும் விநாயகரைத் தேவாரத்தில் பாடியுள்ளனர். ரிக் வேதத்தில் கணபதி போற்றப்படுகிறார். திருமந்திரத்திலும் மற்றும் பதினோராம் திருமுறையில் கபிலதேவர், பரணதேவர், அதிராவடிகள், நம்பியாண்டார் நம்பிகள் ஆகியோரின் பாடல்களிலும் விநாயகர் சிறப்பாகப் போற்றப்படுகிறார்.
ஐந்து கரங்களும், யானை முகமும், சந்திரனைப் போன்ற தந்தங்களும் கொண்ட ஞானக் கொழுந்தான விநாயகரைப் போற்றினால் புத்தி வளரும், நலங்கள் பெருகும் என்று, 3000 ஆண்டுகளுக்கு முன்பே திருமூலர் தனது திருமந்திரத்தில் பாடியுள்ளார்.
எனினும், திருவாசகத்தில் விநாயகர் பற்றிய குறிப்பே இல்லாதது வியப்பான செய்தி!

திருவெண்காடு ஸ்ரீ சித்திவிநாயகர் தேவஸ்தானம்
 மண்டைதீவு - இலங்கை

"திருவெண்காடு சுவேதாரணியம்பதி பொன்னம்பலம் பூலோககைலாய புண்ணிய திவ்வியநாம சேஷ்திரத்தில் எழுந்தருளி மூர்த்திகளாக வீற்றிருந்து திருவருள் பாலித்துக்கொண்டிருக்கும் ஸ்ரீ சித்தி விநாயகப்பெருமானும் ஸ்ரீ பாலசுப்பிரமணியரும்." 


விநாயகர் தரும் வரங்கள்
''துங்கக் கரி முகத்துத் தூமணியே! நீ எனக்கு சங்கத் தமிழ் மூன்றும் தா!' என்று ஔவையார், விநாயகப் பெருமானை வேண்டி சங்கத் தமிழ்ப் பாடல்கள் பாடும் புலமை பெற்றார். விநாயகர் அகவலில் யோக தத்துவத்தையும், விநாயகர் தரும் இக, பர சௌபாக்கியங்களையும் பாடியுள்ளார். 'முன்னை வினையின் முதலைக் களைந்து, எல்லை இல்லா ஆனந்தம் அளித்து, அருள்வழி காட்டுபவர், அற்புதம் நின்ற கற்பகக் களிறு’ என்று போற்றுகிறார் ஔவையார்.
செல்வாக்கும் சொல்வாக்கும் தருவான், வெவ்வினையை வேரறுக்க வல்லான், நம் வேட்கை தணிவிப்பான் விநாயகன்.
'வானுலகும், மண்ணுலகும் வாழ, நான்கு மறை வாழ, செய்ய தமிழ் பார்மிசை விளங்க, ஆனைமுகனைப் பரவு’ என்கிறார் சேக்கிழார்.
விருத்தாசல புராணம், பாதாள விநாயகரின் பெருமைகளைப் பாடுகிறது. 'உலகத் தொல்லைகள், பிறவித் தொல்லைகள் போகவும், செல்வமும் கல்வியும் கருணையும் வந்து சேரவும் கணபதியைக் கைதொழ வேண்டும்’ என்கிறது இந்தப் புராணம்.

திருக்கைலாயம்
ஆனைமுகன் , ஆறுமுகன் ,  அம்பிகை , பொன்னம்பலவன்

விநாயக புராணம்
திருவாவடுதுறை ஆதீன கச்சியப்ப முனிவர் விநாயக புராணத்தை விரிவாகப் பாடியுள்ளார். இதில் விநாயகரின் தோற்றம், பெருமை, விரதங்கள் மிகவும் சிறப்பாக இடம்பெற்றுள்ளன.
விநாயகரை வணங்கும் பக்தருக்குத் துன்பமில்லை, வறுமை இல்லை, நோயில்லை, துக்கம், சோகம், மோகங்கள், பாவங்கள், பகைகள் எதுவும் இல்லை என்கிறது இந்தப் புராணம்.


செவ்வாய் பிள்ளையார் விரதம்
பெண்கள் மட்டுமே விநாயகருக்குச் செய்யும் விரதபூஜை இது. ஆடிச் செவ்வாய் இரவு ஆண்கள் உறங்கிய பின்போ அல்லது ஆண்கள் இல்லாத ஒரு வீட்டிலோ பெண்கள் கூடி, நெல் குத்தி, அரிசியாக்கி, மாவாக்கி, உப்பில்லாது, இளநீரை விட்டுப் பிசைந்து உருண்டை ஆக்கி, நீராவியில் வைத்து எடுத்து, கன்று ஈனாத பசுவின் சாணத்தில் பிள்ளையார் செய்து, பூஜை செய்து, விடிவதற்குள் விரதம் முடித்து, காலையில் பிள்ளையாரை ஆற்றில் விட்டால் தாலி பாக்கியம் பெருகும், தன தான்யங்கள் வளரும் என்பது ஐதீகம்.
இது, விரத மகாத்மியம் என்னும் நூலில் கூறப்பட்டுள்ள 46 விரதங்களில், விநாயகரின் அருள் கிடைக்கச் செய்யும் ஒரு விரதம் ஆகும்.


தெய்வநாயகன் விநாயகன்
கடவுளர்களே போற்றும் கடவுள், கணபதி! திரிபுரங்கள் எரிக்கச் செல்லுமுன் தந்தை சிவன் தன்னைப் போற்றி வணங்க மறந்ததால், 'அச்சிவன் உறைரதம் அச்சு அது பொடி செய்த அதி தீரன்’ விநாயகர்.
தம்பிக்கு வள்ளியை மணம் செய்து வைத்தவர்;
மதுகைடபர்களை வெல்ல மகாவிஷ்ணுவுக்கு உதவியவர்;
கிருஷ்ணரின் மனைவி ருக்மிணி சம்பாசுரனை வெல்லவும், பிரத்யும்னனை மீட்கவும் துணை நின்றவர்;
நம்பியாண்டார் நம்பிகளுக்குத் திருநாரையூரில் நிவேதனம் உண்டு, தரிசனம் தந்தவர்;
தில்லையில் திருமுறைகள் உள்ளதைக் காட்டி, 12 திருமுறைகளை மீட்டவர்.
திருவெண்காட்டில் சித்திவிநாயகர், விருத்தாசலத்தில் ஆழத்துப் பிள்ளையார்; திருச்சியில் உச்சிப் பிள்ளையார்; சீர்காழியில் ஆபத்து காத்த விநாயகர்; திருந்துதேவன்குடியில் நண்டு பூசித்த கர்க்கடக விநாயகர்; திருவீழிமிழலையில் படிக்காசுப் பிள்ளையார். இவரை மணிமேகலை காப்பியம் 'கரங்கவிழ்ந்த காவிரிப்பானை’ என்று போற்றுகிறது.  


நோய் தீர்க்கும் விநாயகர்
பிருகு முனிவரிடம் சோமகாந்த அரசன் விநாயகர் மந்திர உபதேசம் பெற்று வேண்டிட, குஷ்ட நோய் தீரப் பெற்றான். கற்கன் என்ற அரச குமாரனும் முத்கல முனிவரால் விநாயக மந்திர உபதேசம் பெற்று, நோய் தீரப் பெற்றான்.
திருவானைக்காவலில் கவிகாளமேகம் விநாயகரைப் பாடும் போது 'ஏரானைக் காவலில் உறை, என் ஆனைக் கன்று அதனைப் போற்றினால், வாராத புத்தி வரும், பக்தி வரும், புத்திர சம்பத்து வரும், சக்தி வரும், சித்தி வரும்தான்’ என்று புத்தி, சத்தி, சித்தி பெற விநாயகனைத் தொழச் சொல்கிறார்.
சுயக் கட்டுப்பாடு கொண்டவர் விநாயகர். ஐம்புலன்தன்னை அடக்கும் யானை கட்டும் கயிறு, அங்குசம் இரண்டையும் தானே கொண்டு, மோன நிலையில் தியானம் செய்யும் விநாயகர் யோகம், நாதம், தாளம், ஞானம் எல்லாவற்றையும் தரும் நர்த்தன யோக கணபதி ஆவார்.


லட்சுமி கணபதி காயத்ரி
28 எழுத்து மந்திரம்
'ஓம் ஸ்ரீ ம் ஸௌம்யாய கணபதயே வரவரத
சர்வ ஜநம்மே வசமாநய ஸ்வாஹா’
குடும்ப க்ஷேம காயத்ரி
'ஓம் ஸ்ரீ ம் ஹ்ரீம் க்லீம் லக்ஷ்மீ கணபதயே
மம மம குடும்பஸ்ய யாவத்ராநாம் துரிதம்
ஹர ஹர க்ஷேமம் குருகுரு ஸர்வசௌபாக்யம்
தேஹி தேஹி ஐம்கம் கணபதயே ஸ்வாஹா’
காரிய ஸித்தி காயத்ரி
'ஓம் க்லெளம் ஸ்ரீ ம் ஸர்வவிக்ன ஹந்த்ரே பக்தானுக்ரஹகர்த்ரே
விஜய கணபதயே ஸ்வாஹா’
ஆல், அரசு, இலந்தை, வன்னி மர விநாயகரையும், அத்தி மரத்தின் விநாயகரையும் தொழுது பூசித்தால் முழுப்பலன் பெறலாம். வேழ முகத்தானைப் போற்றுவோம்; வெற்றி பெறுவோம்!



ஓம் கம் கணபதயே நமஹ...!!

தென்னாடுடைய சிவனே போற்றி…!
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி…! போற்றி…!!
மேன்மைகொள் சைவநீதி . . . !
விளங்குக உலகமெல்லாம் . . . !
இன்பமே சூழ்க . . . !
எல்லோரும் வாழ்க . . . ! 


 "திருச்சிற்றம்பலம்" '' திருச்சிற்றம்பலம்'' "திருச்சிற்றம்பலம்''