![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi1IMIbC13ZAXBhhRwS2rlQ-8p5uaY_AB_viRp793QnClW_i4CkCThWAwbbz6Tm_hRqQArXTu1vzcJNnLAGQi5slG4kNW22QL3BIOjaIbVV9znTrCSd1MOj8ubTC9F1Ru6YqVORDmvzoEY/s1600/fa.jpg)
சிவபெருமானை நாம் நாள் தோறும் வணங்குகிறோம். ஆனாலும் பிரதோஷ காலத்தில் எம்பெருமானை ஆலயம் சென்று வணங்குவது சிறந்த பயனை அளிக்கும்.
மாதந்தோறும் இருமுறை - வளர்பிறை, தேய் பிறை திரயோதசி ( 13 ம் நாள் ) நாட்கள் பிரதோஷ தினங்களாகும்.
இந்நாட்களில் மாலை 4.30 மணி முதல் 6.00 மணி வரையிலான நேரம் பிரதோஷ காலமாகும். இந்த நேரத்தில் பரமசிவனை வணங்கி வழிபட்டால் மற்ற நாட்களில் ஏற்படும் துன்பங்கள் நீங்கி இன்பம் பெறலாம் என்பது நம்பிக்கை.
பிரதோச வேளையில் பஞ்ச புராணம் பாடி பலன் பெறுவோம்
விநாயகர் துதி
ஐந்து கரத்தனை ஆனை முகத்தனை
இந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை
நந்தி மகன்தனை ஞானக்கொழுந்தினை
புந்தியில் வைத்தடி போற்றுகின் றேனே
திருமூலர் (திருமந்திரம்)
வாக்குண்டாம் நல்ல மனமுண்டாம் மாமலராள்
நோக்குண்டாம் மேனிநுடங்காது பூக்கொண்டு
துப்பார் திருமேனி தும்பிக்கையான்
பாதம் தப்பாமல் சார்வார் தமக்கு
ஔவையார் (மூதுரை)
தேவாரம்
தோடுடைய செவியன் விடையேறியோர் தூவெண்மதிசூடிக்
காடுடையசுட லைப்பொடிபூசியென் னுள்ளங்கவர் கள்வன்
ஏடுடையமல ரான்முனைநாட்பணிந் தேத்த அருள்செய்த
பீடுடையபிர மாபுரமேவிய பெம்மா னிவனன்றே.
சம்பந்தர்
பிடியத னுருவுமை கொளமிகு கரியது
வடிகொடு தனதடி வழிபடு மவரிடர்
கடிகண பதிவர அருளினன் மிகுகொடை
வடிவினர் பயில்வலி வலமுறை யிறையே
சம்பந்தர்
சொற்றுணை வேதியன் சோதி வானவன்
பொற்றுணை திருந்தடி பொருந்தக் கைதொழ
கற்றுணை பூட்டியோர் கடலிற் பாச்சினும்
நற்றுணை யாவது நமச்சி வாயவே
திருநாவுக்கரசர்
பித்தா பிறை சூடி பெருமானே அருளாளாய்
எத்தால் மறவாதே நினைக்கின்றேன் மனத்துன்னை
வைத்தாய் பெண்ணை தென்பால் வெண்ணெய் நல்லூ ரருட்துறையுள்
அத்தாவுனக் காளாயினி அல்லேன் எனலாமே
சுந்தரர்
திருவாசகம்
அம்மையே அப்பா ஒப்பிலா மணியே
அன்பினில் விளைந்த ஆரமுதே
பொய்மையே பெருக்கிப் பொழுதினைச்சுருக்கும்
புழுத்தலைப் புலையனேன் றனக்குச்
செம்மையே ஆய சிவபதம் அளித்த
செல்வமே சிவபெருமானே
இம்மையே உன்னைச் சிக்கெனப் பிடித்தேன்
எங்கெழுந் தருளுவ தினியே
மாணிக்கவாசகர்
திருவிசைப்பா
ஒளிவளர் விளக்கே உலப்பிலா ஒன்றே
உணர்வுசூழ் கடந்ததோர் உணர்வே
தெளிவளர் பளிங்கின் திரண்மணிக் குன்றே
சித்தத்துள் தித்திக்கும் தேனே
அளிவளர் உள்ளத்து ஆனந்தக் கனியே
அம்பலம் ஆடரங்காக
வெளிவளர் தெய்வக் கூத்துகந்தாயை
தொண்டனேன் விளம்புமா விளம்பே
திருமாளிகைத்தேவர்
திருப்பல்லாண்டு
பாலுக்கு பாலகன் வேண்டியழுதிடப் பாற்கடல் ஈந்த பிரான்
மாலுக்குச் சக்கர மன்றருள் செய்தவன் மன்னிய தில்லை தன்னுள்
ஆலிக்கு மந்தணர் வாழ்கின்ற சிற்றம் பலமே இடமாக
பாலித்து நட்டம் பயில வல்லானுக்கே பல்லாண்டு கூறுதுமே
சேத்தனார்
பெரியபுராணம்
உலகெலாம் உணர்ந் தோதற் கரியவன்
நிலவுலாவிய நீர்மலி வேணியன்
அழகில் சோதியன் அம்பலத் தாடுவான்
மலர் சிலம்படி வாழ்த்தி வணங்குவாம்
சேக்கிழார்
திருப்புகழ்
ஏறுமயி லேறி விளையாடு முகம் ஒன்றே
ஈசனுடன் ஞானமொழி பேசுமுகம் ஒன்றே
கூறுமடியார்கள் வினை தீர்க்கும் முகம் ஒன்றே
குன்றுருவ வேல் வாங்கி நின்ற முகம் ஒன்றே
மாறுபடு சூரனை வதைத்த முகம் ஒன்றே
வள்ளியை மணம் புணர வந்த முகம் ஒன்றே
ஆறுமுகமான பொருள் நீ அருளல் வேண்டும்
ஆதி அருணாசலம் அமர்ந்த பெருமானே
அருணகிரிநாதர்
ஓம் கம் கணபதயே நமஹ...!!
தென்னாடுடைய சிவனே போற்றி…!
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி…! போற்றி…!!
எல்லோரும் இன்புற்று இருக்க நினைப்பதுவே அல்லாமல்
வேறொன்று அறியேன் பராபரமே
"கற்றது கைமண் அளவு கல்லாதது உலகளவு"
"மேன்மைகொள் சைவநீதி விளங்குக உலகமெலாம்"
அன்பே சிவம்
திருச்சிற்றம்பலம்'' திருச்சிற்றம்பலம்'' "திருச்சிற்றம்பலம்'