Friday, October 12, 2018

யாழ்ப்பாணம் மண்டைதீவு திருவெண்காடு புண்ணிய நாம சேஷத்திரத்தில் வல்வினைகள் போக்கும் விநாயகர் சதுர்த்தி வழிபாடு ! ! ! 12.10.2018



விநாயகர் என்றால் தனக்கு மேலே வேறொரு தலைவன் இல்லாதவன் என்று பொருள். விநாயகர் முழுமுதற் கடவுள் ஆவார். ‘ஓம்’ எனும் பிரணவ மந்திரம் எல்லாவற்றுக்கும் மூலமாக அமைந்துள்ளது.

‘ஓம்’ எனும் வடிவமாகவும், பிரணவ பொருளாகவும் விநாயகர் விளங்குகிறார். சிவபெருமானின் மகனான விநாயகர் பூதகணங்களின் தலைவரும் ஆவார். அதனால் அவருக்கு கணபதி என்ற பெயரும் உண்டு.

‘கணபதி பூஜை கைமேற்பலன்’ என்பது பழமொழி. விநாயகர் ஏழை, எளியவர்களுக்கு கண்கண்ட தெய்வம் மஞ்சள் பொடியிலும், களிமண்ணிலும், சாணத்திலும் விநாயகரை பிடித்து வழிபடலாம். அந்த வடிவில் அவர் எழுந்தருளி அருள்புரிவார். அவரை வழிபட சாஸ்திரங்கள் தேவையில்லை. கணபதியை உள்ளன்போடு வணங்குபவர்களுக்கு வருகின்ற வில்லங்கங்கள், இடையூறுகள் அனைத்தும் விலகி ஓடும். எனவே தான் எந்த சுபகாரிய தொடக்கத்திலும் அன்று தொட்டு இன்று வரை அனைவரும் விநாயகர் பூஜையை முதலில் கொண்டாடி வருகிறோம்.

பூதமாய், தேவராய், விலங்காய், ஆணாய், பெண்ணாய் இவ்வாறு எல்லாமாக விளங்குபவர் விநாயகர். அவர் ஒரு கொம்பு, இரு செவிகள், மூன்று கண்கள், நான்கு தோள்கள், ஐந்து கரங்கள், யானை முகத்தினை உடையவர்.

கும்பம் ஏந்திய திருக்கரம் ஆக்கும் தொழிலையும், மோதகம் ஏந்திய கரம் காத்தல் தொழிலையும், அங்குசம் ஏந்திய கரம் அழித்தல் தொழிலையும், பாசம் ஏந்திய கரம் மறைத்தல் தொழிலையும், தந்தம் ஏந்திய திருக்கரம் அருளல் தொழிலையும் புரிகின்றன. எனவே, விநாயகர் ஐம்பெரும் தொழில்களை ஐந்து திருக்கரங்களில் புரிந்து பக்தர்களுக்கு அருள்புரிகிறார்.

விநாயகர் வழிபாட்டுக்கு சதுர்த்தி உகந்தது. சதுர்த்தி என்பது ஒரு திதி. ஒவ்வொரு மாதமும் வளர்பிறையிலும், தேய்பிறையிலும் வருகிற நாலாவது நாள் சதுர்த்தி ஆகும். ஆவணி மாதத்தில் வளர்பிறையில் நான்காம் நாளன்று விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படுகிறது.

இது விநாயகர் பெருமான் பிறந்த தினமாகும். விநாயகர் அவதாரம் மகிமை வாய்ந்தது. கயமுகன் என்ற அரக்கன் சிவபெருமானிடம் வரங்கள் பல பெற்றிருந்தான். அந்த வரத்தின் மகிமையால் தேவர்களையும், மனிதர்களையும் கொடுமைப்படுத்தி வந்தான். அவன் கொடுமை தாங்காத தேவர்கள் சிவனிடம் முறையிட்டனர். கயமுகனை சம்காரம் செய்து தேவர்களை காப்பாற்றுவதற்காக விநாயக பெருமான் சதுர்த்தி அன்று அவதரித்தார். விநாயகர், கயமுகனுடன் போர் புரிந்தார். அவன் ஆயுதங்களால் அழியாத வரம் பெற்றவன். விநாயகர் தனது வலக்கொம்பை ஒடித்து சிவமந்திரத்தை உச்சரித்து ஏவ அது கயமுகனை சாய்த்தது. அவன் பெருச்சாளி வடிவில் எதிர்த்து வந்தான். விநாயகர் அவன் மீது கருணை புரிந்தார். அவன் அறியாமை அகன்றது. விநாயகரை வணங்கி நின்றான். விநாயகர் அவனை தன் வாகனம் ஆக்கி அருள் புரிந்தார்.

எந்த மங்களகரமான நிகழ்ச்சியை தொடங்குவதற்கு முன்பும் விநாயகரின் நாமமே உச்சரிக்கப்பட வேண்டும் என சிவபெருமான் கட்டளையிட்டார். விநாயகரின் முக்கியத்துவத்தை உலக மக்கள் உணரும் விதத்தில் தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள திருவலஞ்சுழியில் அவரது சிலையை சிவபெருமானே முன்னின்று பிரதிஷ்டை செய்தார்.

விநாயகர் பல திருவிளையாடல்களை செய்தார். காக்கை வடிவம் கொண்டு அகத்தியரின் கமண்டலத்தில் இருந்து காவிரி நதியை கவிழ்த்து பெருகி ஓடச்செய்தார். விபீஷணன் இலங்கைக்கு எடுத்துச் சென்ற ரங்கநாதர் சிலையை தடுக்கும் விதத்தில் பாலகன் வடிவில் வந்து லீலைகள் புரிந்து சிலையை ஸ்ரீரங்கத்தில் பிரதிஷ்டை செய்தார். முருகன், வள்ளியை மணம் புரிவதற்கு யானை வடிவில் சென்று உதவி செய்தார். அனலாசுரன், சிந்தூரன் ஆகிய அசுரர்களை விநாயகர் விசுவரூபம் எடுத்து அழித்தார். வியாசர் சொல்ல சொல்ல மகாபாரதத்தை எழுதினார்.

விநாயகர் சதுர்த்தி அன்று வீட்டை சுத்தம் செய்து கோலம் போட்டு அலங்கரிக்க வேண்டும். வாழை மரம், மா இலை தோரணம் கட்ட வேண்டும் பூஜை அறையில் சுத்தமான பலகையில் கோலம் போட வேண்டும். அதன் மீது தலை வாழை இலையை போட வேண்டும். நுனி பாகம் வடக்குமுகமாக இருக்க வேண்டும். அந்த இலை மீது பச்சரிசியை பரப்ப வேண்டும். அந்த அரிசியின் மீது களிமண்ணில் செய்துள்ள விநாயகர் விக்ரகத்தை எழுந்தருளச் செய்ய வேண்டும்.

விநாயகர் சதுர்த்திக்கு களிமண் பிள்ளையார்தான் விசேஷம். விநாயகருக்கு மங்கல ஆரத்தி காட்டி, வாழைப்பழம், மாம்பழம், பலாப்பழம் எனும் முக்கனிகளை, கரும்பு, எள், கடலை, அப்பம், மோதகம், பொரி உருண்டை போன்றவற்றை நிவேதனம் செய்து கணேச அஷ்டகம் கூறி பூஜை செய்து அவரை வழிபட வேண்டும். விநாயகர் புராணம் படித்து மங்கல ஆரத்தி எடுக்க வேண்டும். மறுநாள் புனர் பூஜையை கொண்டாட வேண்டும். தயிர் சாதம், நெய்வேத்தியம் செய்ய வேண்டும். அதன் பிறகு கடல், ஆறு, குளம் போன்ற நீர்நிலைகளில் பிள்ளையாரை கரைத்துவிடலாம்.

பிள்ளையார் பூஜைக்கு அருகம்புல்லும் எருக்கம் பூவும் விசேஷமானதாகும். விநாயகர் சதுர்த்தி விரதம் இருப்பவர்கள், விநாயகரின் அருள் பெற்று அனைத்து நலன்களையும் சுகங்களையும் பெறுவார்கள். வாழ்க்கையில் துன்பம், இடைஞ்சல்கள் வராது. 

இலை வழிபாடு பலன்

விநாயகரை மருத இலையால் வழிபட்டால் மகப்பேறு கிடைக்கும். அரச இலையால் வழிபட எதிரிகள் வீழ்வர். அகத்தி இலையால் வழிபட்டால் துயரங்கள், வில்வ இலையால் அர்ச்சனை செய்தால் இன்பம் பெருகும். வெள்ளெருக்கால் வழிபட சுகம் கிடைக்கும். மாதுளை இலையால் வழிபட நற்புகழ் அடைவர். கண்டங்கத்தரி இலையால் வழிபட லட்சுமி கடாட்சம் கிடைக்கும்.