Friday, August 6, 2021

முவுலகும் போற்றி வணங்கும் முழுமுதற் கடவுள் மண்டைதீவு திருவெண்காடு சித்திவிநாயகன் தேவஸ்தான ‘பிலவ’ வருட மகோற்சவ சிறப்பிதழ் - 2021


உலகெலாம் நிறைந்து விளங்குகின்ற எல்லாம் வல்ல பரம்பொருளான சித்திவிநாயகப் பெருமான் தம்மை நினைத்து உள்ளமுருகி வணங்கி வாழும் அடியார்களுக்கு அருள்பாலிக்கும் புண்ணியபதியாம் திருவெண்காடு.

தீவகத்தில் பிரசித்திபெற்ற திருவெண்காடு சித்திவிநாயகர் ஆலய கொடியேற்ற நாள் ஆவணி13 ஆகும். வானளாவ உயர்ந்த அழகான இராஜகோபுரங்களுடன் மண்டைதீவில் அமைந்திருக்கின்ற இந்த சித்திவிநாயகப் பெருமான் ஆலயம் மிகவும் கீர்த்தி பெற்ற மூர்த்தி இருக்கும் புனித ஸ்தலமாகும்.

கருணைமிக்க தொல்லை வினை தீர்க்கும் சித்திவிநாயகனுக்கு பிலவ வருட மஹோற்சவம் (13.08.2021) வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு வேதியர்கள் பூமாரி பொழிய சர்வமங்கல வாத்தியங்கள் முழங்க ‘துவஜாரோகணம்’ எனும் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகின்றது.

சித்திவிநாகப்பெருமான் நடுநாயகமாக வர ஒருபக்கம் அன்பு தம்பி பாலமுருகனும் மற்றப் பக்கம் அருட் சக்திகளான அம்மை அப்பனும் அழகாக வரும் அற்புதமான அருட் காட்சி பக்தி பூர்வமானது.

பத்து நாள்கள் நடைபெறுகின்ற இம்மஹோற்சவத்திலே ஒவ்வாரு நாளும் விதவிதமான அலங்காரத்துடன் வெவ்வேறு அழகிய வாகனங்களில் சித்திவிநாகப்பெருமான் திருவீதி வலம் வரும் காட்சி கண்கொள்ளாக் காட்சியாகும்.

இன்னகாரியம் எனக்கு நிறைவேற்றித் தரவேண்டும் என்று பக்திபூர்வமாக நேர்த்தி வைத்து உள்ளன்போடு வணங்கினால் அந்தக் காரியம் எவ்வித தடங்கலுமின்றி நிச்சயமாக நிறைவேறிவிடும் சித்திவிநாகப் பெருமானைக் கைதொழுதால் எந்தக் காரியமும் நிறைவேறும் என்ற பரிபூரணமான நம்பிக்கையே காரணமாகும்.

வெள்ளையானை திருவிழா, வேட்டை, சப்பரதம், தேர், தீர்த்தம், இவ் ஐந்து திருவிழா நாள்களுமே அடியார் கூட்டம் நிறைந்து காணப்படும் நாள்களாகும். தினமும் முன்னே மங்கள தவில் நாதஸ்வர இசை முழங்க. அடியவர்கள் பக்திப்பரவசத்துடன் சூழ்ந்துவர. பஜனைக் கோஷ்டிகள் சித்திவிநாயகன் புகழ் பாடி வர இடம்பெறும் இனிய நல் விழாப் பொலிவு வர்ணனையில் எழுத்தில் அடங்காது.

சித்திவிநாயகப் பெருமானுடைய பேரருட் கருணையைப் பெற்றுக் கொள்வதற்காக இந்த ஆலயத்தில் மூன்று காலப் பூசை நிகழ்த்தப்படுகின்றது. இந்தப் பூசையைப் பார்ப்பதற்கு அடியார்கள் கூடுவார்கள்.

திருவிழா காண சித்திவிநாகன் அடியார்கள் திரண்டு வருகின்றனர். எல்லை இல்லா கருணைமிகு எம்பெருமான் அருள்பெற்று வாழ அவனருளையே நாடி நிற்போமா!

சுபம். 

இங்ஙனம் இறைபணியில்

திரு பொ.வி.திருநாவுக்கரசு குடும்பத்தினர்
திரு இரத்தினசபாபதி யோகநாதன் [இந்திரன்]
ஆலய தர்ம கர்த்தாக்கள்.

மண்டைதீவு திருவெண்காடு ஸ்ரீ சித்தி விநாயகர் தேவஸ்தானம். யாழ்ப்பாணம் - இலங்கை.