Saturday, October 12, 2013

நவராத்திரியின் சிறப்பியல்புகள்

புரட்டாசியும் பங்குனியும் எமனின் கோரைப்பற்கள் என்று கருதப்படுகின்றன. ஜீவராசிகள் எமனின் பற்களில் சிக்கித் துன்பப்படுவதைத் தவிர்க்க நவராத்திரி ஒன்பது நாளும் வழிபட வேண்டும்.




முதல் மூன்று நாட்கள் துர்க்கையையும் அடுத்த மூன்று நாட்கள் லஷ்மியையும் கடைசி மூன்று நாட்கள் சரஸ்வதியையும் வழிபட வேண்டும்.

ஒன்பது மலர்கள், ஒன்பது வகை அலங்காரங்கள், ஒன்பது வகை நிவேதனம் என்று வழிபாடு அமைய வேண்டும். இறைவனுக்கு அழகு செய்தால் வாழ்க்கையும் அழகாக சிறப்புடன் அமையும் என்ற தத்துவம்தான் இந்த வழிபாட்டுக்குப் பின்னால் இருக்கிறது.

ஒன்பது நாட்களின் வழிபாடு

முதல் நாள் 2 வயது குழந்தையை அலங்கரித்து அம்மனை குமாரிகாவாக வணங்கினால் பணக்கஷ்டம் தீரும்.

இரண்டாம்நாள் மூன்று வயது குழந்தையை அலங்கரித்து திரிமூர்த்தியாக வணங்கினால் தன, தானியங்கள் பெருகும்.

மூன்றாம் நாள் நான்கு வயது குழந்தையை அலங்கரித்து கல்யாணியாக வழிபட்டால் எதிரிகள் விலக்கம் ஏற்படும்.

நான்காம் நாள் ஐந்து வயது குழந்தையை அலங்கரித்து ரோகிணியாக வழிபட்டால் கல்வி வளர்ச்சி மிகும்.

ஐந்தாம் நாள் ஆறு வயது சிறுமியை அலங்கரித்து காளிகாவாக வணங்கினால் துன்பம் நீங்கும்.

ஆறாம் நாள் ஏழு வயது சிறுமியை அலங்கரித்து சண்டிகா தேவியாக வணங்கினால் செல்வ வளர்ச்சி மிகும்.

ஏழாம் நாள் எட்டு வயது சிறுமியை அலங்கரித்து சாம்பவி வடிவில் வழிபட்டால் தம்பதிகளுக்குள் அன்யோன்யம் பெருகும்.

எட்டாம் நாள் ஒன்பது வயது சிறுமியை அலங்கரித்து துர்க்கையாக வணங்கினால் துக்கம் விலகும்.

ஒன்பதாம் நாள் பத்து வயதுச் சிறுமியை அலங்கரித்து சுபத்ராவாக வழிபட்டால் மங்களம் கிடைக்கும்.