Thursday, December 25, 2014

திருவெண்காட்டில் விநாயகர் சதுர்த்தி விரத அனுஸ்டானங்கள் ! ! ! 25/12/2014


பார்வதி, பரமேஸ்வரர் ஆகியோரின் பிரார்த்தனைக்கு இணங்க அவர்களுக்கு புத்திரனாக அவதரித்த நாள் விநாயக சதுர்த்தி எனப்படுகிறது. எல்லாப் பண்டிகைக்கும் முதலாக வருவது விநாயர் சதுர்த்தி.

விநாய சதுர்த்தியின்போது களிமண்ணால் செய்யப்பட்ட விநாயகர் சிலையை வீட்டிற்கு வாங்கி வந்து, அதற்கு வண்ணகுடை அணிவிப்பார். பின்னர் அந்த சிலைக்கு எருக்கம்பூ மாலை அணிவிப்பார்கள். அருகம்புல், மல்லி, அரளி போன்ற மலர்களால் அர்ச்சனை செய்வார்கள். 21 அருகம்புல்லினால் விநாயகப்பெருமானின் பல்வேறுப் பெயர்களை சொல்லி அர்ச்சனை செய்ய வேண்டும் என்பது ஐதீகம். அவருக்கு விருப்பமான கொழுக்கட்டை, சுண்டல் அப்பம், பொரி, அவல் முதலிய உணவுப்பொருட்கள் இந்த பூஜையில் முக்கியமாக இடம்பெற்றுவிடும்.

‘பாலும் தெளிதேனும் பாகும் பருப்புமிவை
நாலும் கலந்துனக்கு நான்தருவேன் - கோலஞ்செய்
துங்கக் கரிமுகத்துத் தூமணியே! நீஎனக்கு
சங்கத் தமிழ் மூன்றும் தா!’


என்று ஒளவையாரின் பாடல்பெற்ற விநாயகரை மூன்று நாட்கள் வீட்டில் வைத்திருந்து விட்டு, கடலில் சென்று கரைத்து விடுவார்கள். தமிழ்நாட்டில் பெரிய பெரிய விநாயகர் சிலைகளை செய்து பத்தாம் நாள் ஊர்வலமாகக் கொண்டு சென்று, கடலில் கரைப்பார்கள். இந்தியா முழுவதிலும் இந்த வழக்கம் நடைமுறையில் உள்ளது. சில இடங்களில் குறிப்பாக ஐதராபாத்தின் சார்மினார், பழைய நகரம் போன்ற இடங்களில் இவ்வாறு ஊர்வலமாகக் கொண்டு செல்லப்படும் விநாயகருக்கு, இசுலாமியர்கள் கம்பளம் விரித்து வரவேற்பு கொடுப்பார்கள். மத நல்லிணக்கத்தின் அடையாளமாக ஆண்டுதோறும் இது கடைபிடிக்கப்படுகிறது.


மக்கள் கேட்கும் வரத்தை கொடுக்கும் கடவுளாக விநாயகர் கருதப்படுகிறார். இதன் பின்னணியாக ஒரு கதை கூறப்படுகிறது. சிவபெருமான் விநாயகரை அவருடைய கணங்களின் தலைவனாக நியமித்தார். இதனால்தான் அவர் கணேஷன் என்றழைக்கப்படுகிறார் என்று கூறப்படுகிறது. பிரம்மதேவனும் அவருக்கு அனிமா, மகிமா என்ற இரண்டு அஷ்டசித்திகளை மனைவிகளாகக் கொடுத்து அவரைப் பார்த்து பல்வேறு துதிகளைப் பாடினார். இதைக் கண்டு மகிழ்ந்த விநாயகர், பிரம்மதேவனுக்கு வேண்டும் வரம் அளிப்பதாகக் கூறினார். உடன் பிரம்மதேவன் ‘தங்கள் அருளால் என்னுடைய படைப்பெல்லாம் இடையூறின்றி நிறைவேற வேண்டும்’ என்று கேட்டுக் கொண்டார். விநாயகரும் அதற்கு அருள் புரிந்தார்.

முதன்மைக் கடவுள் விநாயகர்

பக்தர்களுக்கு எளிமையானவராக விநாயகர் கருதப்படுகிறார். முதன்மைக் கடவுளாகவும் இவர் கொள்ளப்படுகிறார். மஞ்சள் பொடி, சாணம், வெல்லம், களிமண், வெள்ளெருக்கின் வேர், சந்தனம் போன்றவற்றில் கூட பிள்ளையாரைப் பிடித்து பூஜை செய்துவிடலாம். அவரை திருப்திப் படுத்துவது மிகவும் எளிது. விநாயகர் வழிபாடு என்பது இந்தியாவில் மட்டுமல்லாது, இலங்கை, பர்மா, சீனா, நேபாளம், எகிப்து, கிரேக்கம், கயா, ஜாவா போன்ற நாடுகளிலும் காணப்படுகின்றது.

விநாயகர் புராண வரலாறு

விநாயகர் சிவபெருமான், பார்வதிக்கு மகனாக கொள்ளப்படுகிறார். முருகனின் அண்ணனாகவும் கருதப்படுகிறார். இவருடைய வாகனம் மூஞ்சூறு. ஒருமுறை பார்வதிதேவி குளிக்க போனாராம். அவ்வாறு குளிக்கப் போகும்போது தன்னுடைய அழுக்கையெல்லாம் ஒன்று சேர்த்து விநாயகரை படைத்து, அவரைக் காவலுக்கு வைத்துவிட்டு சென்றாராம். அப்பொழுது சிவபெருமான் அங்குவந்து தான் உடனடியாக பார்வதியைக் காண வேண்டும் என்று கேட்டாராம். அதற்கு விநாயகர் அனுமதி மறுக்க, இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.

இறுதியில் சிவபெருமான் விநாயரின் தலையை வெட்டினார். அப்பொழுது அங்குவந்த பார்வதி இதைக் கண்டு வருத்தமடைந்தாராம். தன்னிலிருந்து பிறந்த விநாயகர் தன்னுடைய குழந்தையைப் போன்றவர் என்று அவர் கூறினார். அவருடைய வருத்தத்தைக் கண்ட சிவபெருமான், விநாயகருக்கு உயிர்க்கொடுக்க முன்வந்தார். ஆனால் வெட்டப்பட்ட தலையைக் காணவில்லை. பூலோகத்திலும் அவருக்காக ஒரு தலையைத் தேடினார்கள். எங்கும் கிடைக்காததால் யானை முகத்தை வைத்து விநாயகருக்கு உயிர் கொடுத்தார் ஈசன். பார்வதியும் மகிழ்ச்சியடைந்தார்.


விநாயகர் சதுர்த்தியில் விரதம்

விநாயகர் சதுர்த்தியன்று பூஜையறையில் ஒரு பலகையை வைத்து அதன்மீது கோலமிடுவார்கள். பின்பு அதன்மேல் வாழையிலையை வைப்பார்கள். அதன் மேல் பச்சரிசியை பரப்புவார்கள். அதன் நடுவில் களிமண்ணால் செய்த பிள்ளையாரை வைப்பார்கள். அதன்பின்பு அருகம்புல் கொண்டு அர்ச்சனை செய்வார்கள். பிள்ளையாருக்கு அருகில் ஒரு சொம்பு வைத்து, மாவிலை, தேங்காய் முதலியவைக் கொண்டு கும்பம் வைப்பார்கள். பின்பு அவருக்கு படையலிடுவார்கள். அவருடைய மூல மந்திரத்தை 51 முறை சொல்லி வழிபடுவார்கள்.


அன்று பகலில் விரதம் இருப்பவர்கள் மாலையில் சந்திரனைப் பார்த்துவிட்டு பிள்ளையாரை வணங்குவார்கள். அவ்வாறு செய்தால்தான் விரதம் முழுமையடையும் என்ற நம்பிக்கை தமிழ்நாட்டில் நிலவுகிறது. அகத்தியர் காவேரி நதியைத் தன் கமண்டலத்தில் அடைத்து வைத்திருந்த போது, மக்களுக்குப் பயன் பட வேண்டி, அகத்தியர் மாலைக் கடன்கள் செய்யச் சென்ற போது, அந்தக் கமண்டலத்தைக் கீழே வைத்துவிட்டு மாலைக்கடன்கள் செய்ய ஆரம்பிக்க அப்போது அங்கே அந்தணச் சிறுவனாக வந்த விநாயகர் கமண்டலத்தைக் கவிழ்த்து விடுகின்றார்.

கமண்டலத்து நீர் பொங்கிப் பெருகிப் பிரவாகமாய் ஓட ஆரம்பிக்க, திகைத்துப் போன அகத்தியர் குறும்பு செய்த சிறுவனைத் தண்டிக்கும் நோக்கத்துடன், சிறுவனைப் பிடிக்க ஓட, விநாயகர் அவர் கையில் மாட்டாமல் அங்கே இங்கே அலைக்கழித்துவிட்டுப் பின்னர் மாட்டிக் கொள்ளுகின்றார். சிறுவனைக் குட்டுவதற்கு அகத்தியர் கையை ஓங்க, விநாயகர் காட்சி தருகின்றார்.

குட்ட நினைத்த தன் தலையிலேயே குட்டிக் கொண்டு மன்னிப்பும் கோருகின்றார் அகத்தியர். மக்களின் பயனுக்கு ஆகவேண்டியதை அடைத்து வைத்ததாலேயே தான் வந்து இம்மாதிரிச் செய்யும்படி ஆயிற்று என விநாயகர் சொல்ல, அகத்தியரும் தன் தவற்றை ஒப்புக் கொள்ளுகின்றார்.

இவருக்கு சாற்றவேண்டியவை:

விநாயகரைப் போன்ற எளிமையான கடவுள் வேறு யாரும் இல்லை. அவருக்குப் பிரசாதமாக அவல், பொரி கொடுத்தால் கூடப் போதும். அதுவும் இல்லையா, தெருவில் முளைத்துக் கிடக்கும் அருகம்புல்லைப் பறித்து வந்து சுத்தம் செய்து விநாயகருக்குச் சாற்றினல் போதும். மனம் குளிர்ந்துவிடுவார் விநாயகர். 


உகந்த நாட்கள்:

செவ்வாய் மற்றும் சனிக்கிழமை விநாயகருக்கு மிகவும் உகந்த நாட்கள். அந்த தினங்களில் செவ்வரளி, மஞ்சள் அரளி மலர் சற்றி வணங்குதல் மிகவும் சிறந்தது.

படைக்கவேண்டியவை :

பிள்ளையாருக்கு மோதகம் என்னும் கொழுக்கட்டை படைப்பதன் நோக்கம் வெளியே வெறுமையாக இருக்கும் நம் உடலினுள் உள்ளே இருக்கும் இனிமையான அமிர்தத்தைப் போல் வெளியே வெறும் மாவாகக் காட்சி அளித்தாலும் உள்ளே இருக்கும் பூரணம் இனிப்பாய் இருப்பதைப் போல் நம் வாழ்விலும், இனிமையும் பூரணமாய் அளிப்பார் விநாயகர். எவ்வாறு வெறும் அரிசிமாவினால் செய்த தோலினுள் உள்ளே உள்ள பூரணம் இனிப்பாக இருக்கிறதோ அவ்வாறே நம் உடலின் உள்ளே உள்ள அம்ருதமயமான ஆனந்த நிலையை விநாயகன் துணையால் நாம் அடைவதும் இனிப்பாக இருக்கும்.


ஓம் கம் கணபதயே நமஹ...!!

தென்னாடுடைய சிவனே போற்றி…!
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி…! போற்றி…!!
மேன்மைகொள் சைவநீதி . . . !
விளங்குக உலகமெல்லாம் . . . !
இன்பமே சூழ்க . . . !
எல்லோரும் வாழ்க . . . ! 


 "திருச்சிற்றம்பலம்" '' திருச்சிற்றம்பலம்'' "திருச்சிற்றம்பலம்'