Thursday, March 26, 2015

இறைவனுடைய திருநாமங்களை உள்ளம் உருகி, இசையுடன் சேர்த்து பாடுவதே நாம சங்கீர்த்தனம். அதை விளக்கும் கதை இது…


மத்திய தேசத்தை, சூரசேனர் என்னும் அரசன் ஆண்டு வந்தார். விநாயகருடைய பக்தரான அவரிடம், ‘விநாயகருக்கு கோவில்கள் எழுப்பி, வழிபாடுகளும், பூஜைகளும் நடத்தி வந்தால், இம்மைக்கு மட்டுமல்ல, மறுமைக்கும் பலன் உண்டு…’ என்று கூறினார் வசிஷ்டர்.

அதன்படி, நகரெங்கும் விநாயகருக்கு கோவில்கள் எழுப்பியதுடன், மக்கள் விநாயகர் வழிபாட்டை கடைபிடிக்குமாறு வேண்டுகோளும் விடுத்தார் மன்னர். மக்களும் நீதிநெறி தவறாமல், தர்ம சிந்தனை மற்றும் நல்லொழுக்கத்துடன் இறைவனின் நாமத்தை பாராயணம் செய்து வந்தனர்.



இந்நிலையில் ஒருநாள், விநாயகரின் கணங்கள், சூரசேனருக்குக் காட்சி தந்து, ‘சூரசேனா… உம்முடைய பக்தியில் மகிழ்ந்த விநாயக பெருமான், தங்களை அழைத்து வரப் பணிந்துள்ளார்.

இம்முக்தி விமானத்தில் ஏறுங்கள்; விநாயக உலகம் செல்லலாம்…’ என்றனர். அதற்கு மன்னர், ‘விநாயகரின் கணங்களே… நான் மட்டும் இம்முக்தி விமானத்தில் ஏறுவது சரியல்ல; என் சொல் கேட்டு, மக்கள் அனைவரும் விநாயக வழிபாடு செய்து வருகின்றனர். அதனால், எம்முடன் அவர்களும் வர வேண்டும்…’ என, வேண்டினார்.



அதன்படியே, அனைவரும் விமானத்தில் ஏற, விமானம் புறப்பட்டது. அந்நேரத்தில், கொடிய நோயுடைய ஒருவன், விமானத்தில் ஏறினான். புறப்பட்ட விமானம், அப்படியே நின்று விட்டது.

‘ஏன் விமானம் புறப்படவில்லை…’ எனக் கேட்டார் மன்னர். விநாய கணங்களும், ‘மன்னா… பெரும் பாவியாகிய இவன் ஏறியதால் தான், விமானம் நகர மறுக்கிறது…’ என்றனர். ‘அப்படி என்ன இவன் கொடும் பாவம் புரிந்தான்…’ எனக் கேட்டார் மன்னர். ‘இவன் பெயர் புதன், (நவக்கிரகங்களில்
ஒன்றான புதன் அல்ல) கவுட தேசத்தைச் சேர்ந்தவன். இவன் மனைவி சாவித்திரி; மகா பதிவிரதை. ‘நற்குலத்தில் பிறந்தும், அழகும், அறிவும், நற்குணங்களும் நிறைந்த மனைவி அமைந்தும், செல்வ வளம் இருந்தும், கூடா நட்பால், விலை மாதர் தொடர்புடன், தீய பழக்க வழக்கங்களிலும் திளைத்து வந்தான்.


‘அவனின் தகாத செயல்களை கண்டித்த தந்தை, தாய் மற்றும் மனைவியை அடித்துக் கொன்றான். பின், வீட்டில் இருந்த செல்வத்தையெல்லாம் மூட்டை கட்டி, ஒரு விலைமாதோடு நாட்டை விட்டே வெளியேறினான். 'வழியில், ஒரு வனத்தில், தாலிவனர் எனும் முனிவரின் மனைவியான சுலபையிடம் தவறாக நடக்க முயற்சித்தான். கோபம் கொண்ட முனிபத்தினி, ‘மூடனே… என்னை தொட நினைத்த உன்னை, கொடுமையான நோய் பீடிக்கட்டும்…’ என, சாபம் கொடுத்தாள். ‘அடுத்த நொடி, அவன் உடலில் கொடும் நோய் ஏற்பட்டு, அவன் உருவமும் பயங்கரமாக மாறிப் போனது. ‘இதைக் கண்ட விலைமாது, அவனிடம் இருந்த செல்வத்தை எடுத்துக் கொண்டு, ஓடி விட்டாள்.

‘பெற்றோரையும், உத்தமியான மனைவியையும் கொன்ற பாவம், முனிபத்தினியின் சாபம், என அனைத்தும் சேர, புதன் படாதபாடு பட்டு இறந்து, நரகத்தை அடைந்தான். அங்கேயும், அவன் பல துன்பங்களை அனுபவித்தாலும், பாவத்தின் மிச்சம், மீதியை அனுபவிக்க உன் நாட்டில் பிறந்து, இப்படி கொடும் நோயால் அவதிப்படுகிறான். இவன் இறங்கினால் தான், விமானம் புறப்படும்…’ என்றனர்.


இதைக் கேட்ட மன்னருக்கு புதன் மேல் கோபம் வந்தாலும், அவனுடைய தற்போதைய நிலையை நினைத்து பரிதாபம் கொண்டு, ‘கண நாதர்களே… இவன் கொடும் பாவி என்பதில் சந்தேகம் இல்லை; ஆனால், அதன் பயனை நரகத்திலும், பிறவி எடுத்தும் பட்ட துன்பம் போதாதா… வினையை அறுக்கும் விநாயக கணங்களான உங்களைப் பார்த்த பின், இவன் பாவம் எப்படித் தொடரும்… அதனால், இவன் மீது இரக்கம் காட்டுங்கள்…’ என வேண்டினார்.
கணங்களுக்கும் மனம் இரங்கி, ‘இவன் பாவம் தொலைந்து, நலம்பெற வேண்டுமானால், நீங்கள் எல்லாரும் கணபதியை நினைத்து, நாம மந்திர ஜெபம் செய்யுங்கள்…’ என்றனர்.

அப்படியே அனைவரும் நாம பஜனை செய்ய, நோயால் பீடிக்கப்பட்டவனின் பாவம் விலகியது. அதன் பின், விமானம் புறப்பட்டு, கணபதி உலகத்தை அடைந்தது. நாம பஜனை உயர்ந்தது. அது நடைபெறும் இடங்களுக்குச் சென்று கலந்து கொண்டால் கூடப் போதும்; பாவங்கள் விலகும்!



ஓம் கம் கணபதயே நமஹ...!!

தென்னாடுடைய சிவனே போற்றி…!
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி…! போற்றி…!!
மேன்மைகொள் சைவநீதி . . . !
விளங்குக உலகமெல்லாம் . . . !
இன்பமே சூழ்க . . . !
எல்லோரும் வாழ்க . . . ! 

 "திருச்சிற்றம்பலம்" '' திருச்சிற்றம்பலம்'' "திருச்சிற்றம்பலம்'