Wednesday, April 1, 2015

திருவெண்காட்டில் பிரதோச வழிபாடு ! ! ! 01.04.2015 பிரதோச காலம் தோன்றிய கதை ! ! !


பிரதோச வழிபாடு சிவ வழிபாட்டிற்குரிய மிகச் சிறப்பான மிக முக்கியமான வழிபாடாகும். தோசம் என்ற வடமொழிச் சொல்லிற்கு குற்றம் என்று பொருள். பிரதோசம் என்றால் குற்றமற்றது என்று பொருள். குற்றமற்ற இந்தப் பொழுதில் ஈசனை வழிபட்டால் நாம் செய்த சகல பாவங்களும் நீங்கும் என்பது ஐதீகம். பிரதோச காலமென்பது மாலை 4 மணி முதல் 6 மணி வரையான காலமாகும்.

திங்கட்கிழமை பிரதோசம் சோமா வாரப் பிரதோசம் என்றும் சனிக்கிழமை பிரதோசம் சனிப்பிரதோசம் என்றும் அழைக்கப்படும் என்கிறார் ஈரோடு மாவட்டம் அவல்பூந்துறையை சேர்ந்த விஜய்சுவாமிஜி. அவர் மேலும் கூறியதாவது:-


பிரதோச காலம் தோன்றிய கதை என்ன என்பதை பார்ப்போம். அமிர்தத்தைப் பெறவேண்டி திருபாற்கடலை தேவர்களும், அசுரர்களும் சேர்ந்து கடைந்த போது ஆல கால விஷம் அதிலிருந்து வெளிப்பட்டது. பாற்கடலை கடையத் தொடங்கியது தசமித் திதியாகும். ஆலகால விஷம் வெளிப்பட்ட நாள் ஏகாதசி திதியாகும்.

ஆலகால விஷத்தின் கடுமை தாங்க முடியாமல் தேவர்களும், அசுரர்களும் சிவபெருமானிடம் முறையிட்டு வேண்ட சிவனும் அந்த விஷத்தை அப்படியே எடுத்து உண்டார். விஷம் முழுமையாக இறைவனின் வயிற்றில் இறங்கினால் எங்கே இறைவனிற்கு ஏதாவது தீங்கு நேர்ந்து விடுமோ என அஞ்சிய அன்னை பார்வதிதேவி இறைவனின் கண்டத்தை அழுத்த விஷமானது கழுத்திலேயே தங்கி விட்டது.


அன்று முதல் இறைவனும் திருநீலகண்டர் என்று ஒரு திருநாமமும் பெற்று அழைக்கப்படலானார். அதன் பின்பு சிவனின் கட்டளைப்படி தொடர்ந்து திருப்பாற்கடலை கடைந்த போது துவாதசி அன்று அமிர்தம் தோன்றியது. அமிர்தத்தை உண்ட தேவர்கள் அந்த சந்தோசத்தில் இறைவனை மறந்து இறைவனை வழிபடாமல் ஆடிப்பாடி மகிழ்ந்திருந்தனர்.

மறுநாள் திரயோதசி அன்று தங்கள் தவறினை உணர்ந்து சிவபெருமானிடம் தங்களை மன்னிக்கும்படி மன முருகி வேண்டினார்கள். பரம கருணா மூர்த்தியான சிவ பெருமானும் மனம் இரங்கி, மனம் மகிழ்ந்து தம்முன் இருந்த ரிசபதேவரின் கொம்புகளிற்கிடையில் நின்று அன்னை பார்வதி தேவி காண திருநடனம் புரிந்தார். இது பிரதோச வேளையாகும்.


அன்று முதல் திரயோதசி திதியன்று மாலை 4-6 மணி பிரதோச காலம் என வழங்கலாயிற்று. அமாவாசையிலிருந்து 13-ம் நாளும், பவுர்ணமியில் இருந்து 13-ம் நாளும் திரயோதசி திதியாகும். மாதத்தில் இரண்டு பிரதோசமாகும்.





திருவெண்காடு திவ்வியநாம சேஷ்திர பொற்சபையில் (பொன்னம்பலம்) வீற்றிருந்து ஆனந்த தாண்டவம் புரியும் அருள்மிகு ஸ்ரீ சிவகாம சுந்தரி உடனுறை  அழகிய ஸ்ரீமத் ஆனந்த நடராஐமூர்த்தி , ஸ்ரீ சித்தி விநாயகப் பெருமான் , ஸ்ரீ பாலமுருகன் , ஸ்ரீ மாணிக்கவாசக சுவாமிகள்

10 வகை பிரதோசம்:

1. நித்திய பிரதோசம்:

தினமும் 4 மணி முதல் 6 மணி வரையிலான நேரம்.

2. நட்சத்திர பிரதோசம்:

திரயோதசி திதி எந்த நட்சத்திரத்தில் எந்த நட்சத்திரம் வருகிறதோ அந்த நட்சத்திர உருவமாக சிவனை வழிபடுவது.

3. பட்சபிரதோசம்:

சுக்ல பட்ச அதாவது வளர்பிறையில் வரும் திரயோதசி திதியில் பட்சலிங்க வழிபாடு செய்வது.

4. மாதப் பிரதோசம்:

கிருஷ்ணபட்ச அதாவது தேய்பிறையில் வரும் திரயோதசி திதியில் சந்திர கலையில் நின்று சிவனை வழிபடுவது.

5. பூர்ண பிரதோசம்:

திரயோதசி திதியும் சதுர்த்தி திதியும் பின்னப்படாமல் இருக்கும் போது சிவனை வழிபாடு செய்வது, சுயம்பு லிங்க வழிபாடு சிறப்பான பலனை தரும்.

6. திவ்யபிரதோசம்:

துவாதசியும், திரயோதசியும் அல்லது திரயோதசியும், சதுர்த்தசியும் ஆக இரட்டை திதிகள் சேர்ந்து வருவது. மரகத லிங்க வழிபாடு சிறப்பான பலனைத் தரும்.

7. அபய பிரதோசம்:

ஐப்பசி, கார்த்திகை, மார்கழி, தை, மாசி, பங்குனி மாதங்களில் வரும் திரயோதசி திதியில் சப்தரிசி மண்டலத்தை வழிபடுவது.

8. தீபப் பிரதோசம்:

திரயோதசி திதியில் தீபத் தானங்கள் செய்து வழிபடுவது சிவாலயங்களில் தீப அலங்காரங்கள் செய்வது பட்சாட்சர தீப ஆராதனை முறைப்படி செய்து சிவனை வழிபடுவது.

9. சப்த பிரதோசம்:

திரயோதசி திதியில் ஒளன நடனங்கள் காட்டி சாகா கலையை விளங்குவது. இது யோகிகளிற்குரிய முறையாகும்.

10. மகா பிரதோசம்:

ஈசன் விஷமுண்டது கார்த்திகை மாதம் திரயோதசி திதி சனிக்கிழமை ஆகும். சனிக்கிழமை திர யோதசி திதி வரும் பிரதோச வழிபாடே மகா பிரதோச வழிபாடாகும்.



ஓம் கம் கணபதயே நமஹ...!!

தென்னாடுடைய சிவனே போற்றி…!
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி…! போற்றி…!!
மேன்மைகொள் சைவநீதி . . . !
விளங்குக உலகமெல்லாம் . . . !
இன்பமே சூழ்க . . . !
எல்லோரும் வாழ்க . . . ! 

 "திருச்சிற்றம்பலம்" '' திருச்சிற்றம்பலம்'' "திருச்சிற்றம்பலம்'