Thursday, June 18, 2015

ஸ்ரீ விநாயக பெருமான் தன் துதிக்கையால் ஔவை பிராட்டியை கயிலை மலையில் சேர்ப்பிக்கும் திருக்காட்சி ! ! !


ரு சமயம், ஔவையார் ஆனைமுகக் கடவுளைப் பூஜித்துக் கொண்டு இருந்தார். அவ்வேளையில், சுந்தர மூர்த்தி நாயனார் ஆகாய மார்கமாக கயிலை மலைக்கு ஏகுவதைக் கண்னுற்றார். சுந்தரர், தன் அவதார நோக்கம் நிறைவுற்றதால், சிவபெருமான் ஏவலால் தம்மை அழைப்பிக்கும் பொருட்டு வந்த வெள்ளை யானையின் மீது ஆரோகணித்து, கயிலையம் பதிக்கு சென்று கொண்டிருந்தார்.

திருவெண்காடு ஸ்ரீ சித்திவிநாயகர் தேவஸ்தானம்
 மண்டைதீவு - இலங்கை


"திருவெண்காடு  சுவேதாரணியம்பதி  பூலோககைலாய  புண்ணிய திவ்வியநாம சேஷ்திரத்தில் எழுந்தருளி மூர்த்தியாக வீற்றிருந்து திருவருள் பாலித்துக்கொண்டிருக்கும் ஸ்ரீ அம்பலவாணர் சித்தி விக்கினேஸ்வரப் பிள்ளையார்." 

ஔவை பிராட்டி 'கயிலை மலைக்கு முன்னமே சென்று, சுந்தரருக்கு சிறப்பான வரவேற்பு புரிதல் வேண்டும்' என்ற எண்ணம் கொண்டார். பூஜையில் வேகத்தைக் கூட்டினார். விநாயகப் பெருமான் 'ஔவையே விரைவாக பூஜை புரிய காரணம் யாது?' என வினவ, கயிலை செல்லும் ஆவலை மூதாட்டியும் தெரிவித்தாள்.


புன்முறுவல் பூத்த ஸ்ரீகணேச மூர்த்தி 'ஔவையே பதட்டம் கொள்ளாது நிதானமாக பூஜை புரிவாய். யாம் சுந்தரருக்கு முன் உம்மை கயிலை சேர்ப்போம்' என திருவாய் மலர்ந்து அருளினார். இத்தருணத்தில் ஔவையார் பாடி அருளியது தான் 'விநாயகர் அகவல்' என்னும் ஒப்பற்ற பாடல் தொகுப்பு. 72 வரிகளைக் கொண்டது. பாராயணம் புரிய மிகவும் எளிதானது.

அகவல் துதியால் பெரிதும் மகிழ்ந்த விநாயகக் கடவுள், தன் துதிக்கையால் ஔவையைப் பற்றித் தூக்கி, ஒரு நொடியில் கயிலை மலையில் சேர்ப்பித்து அருளினார். இந்நிகழ்வு நடந்தேறி வெகுநேரம் சென்ற பின்பே, சுந்தர மூர்த்தி சுவாமிகள் கயிலை மலை ஏகினார். ஔவை பிராட்டியும் வரவேற்றுப் பேருவகை கொண்டார். முழு முதற் கடவுளான விநாயகப் பெருமானின் கருணைக்கு எல்லை என்பதும் உளதோ?


'வி' நாயகன்' என்னும் பதம் 'தனக்கு மேல் ஒரு நாயகன் இல்லாத' பரம்பொருளின் தன்மையைக் குறிக்கும். அனைத்து வழிபாடுகளும் - யாகங்களும் - பூஜைகளும் இப்பெருமானின் ஆசியோடு அன்றோ தொடங்கப் பெறுகிறது! அனைத்து தொடக்கங்களின் தொடக்கமும் இப்பெருமான் அன்றோ!!

ஒரு ஆன்மா முக்தி நிலையை அடைய, ஆறு சக்கரங்களை கடந்து சகஸ்ராரம் என்னும் ஏழாம் சக்கரத்தை அடைதல் வேண்டும். முதல் சக்கரமான மூலாதாரத்தின் உபாசன தெய்வம் 'ஸ்ரீவிநாயக மூர்த்தி'. சைவமோ - வைணவமோ' விநாயகக் கடவுளின் திருவடி தொழுதால், ஒரு நொடியில் நம்மை முக்தி நிலையான 'கைலாயம் - வைகுந்தம்' முதலிய பதங்களில் சேர்ப்பித்து அருளுவார்.


விநாயகர் அகவலைப் பாராயணம் செய்வோம். ஆனைமுக இறைவனின் திருவருளைப் பெற்று உய்வு பெறுவோம்.

இப்பதிவை விளக்கும் அருமையான திருக்கோயில் சிற்பம். சிற்பத்தின் மேல் பகுதியில், அம்மையப்பன் கயிலை மலையில் வீற்றிருக்கும் அற்புதத் திருக்காட்சி. சிற்பத்தின் கீழ் பகுதியில், வலப்புறம் சுந்தர மூர்த்தி நாயனார் வெள்ளை யானை மீது ஆரோகணித்து கயிலை மலை செல்லும் காட்சி.


இடப்புறம் ஸ்ரீவிநாயக மூர்த்தி தன் துதிக்கையால் ஔவையை கயிலை மலையில் சேர்ப்பிக்கும் திருக்காட்சி. சுந்தர மூர்த்தி நாயனார் வெள்ளை யானையில் அரோகணித்து திருக்கயிலை மலைக்கு செல்லும் அற்புதக் காட்சி!!

விநாயகர்  அகவல் : ஔவைப் பிராட்டியாரால் அருளிச் செய்யப்பட்டது.

சீதக் களபச் செந்தா மரைப்பூம்
பாதச் சிலம்பு பலவிசை பாடப்
பொன்னரை ஞாணும் பூந்துகில் ஆடையும்
வன்னமருங்கில் வளர்ந்தழ கெறிப்பப்
பேழை வயிறும் பெரும்பாரக் கோடும் (05)


வேழ முகமும் விளங்குசிந் தூரமும்
அஞ்சு கரமும் அங்குச பாசமும்
நெஞ்சிற் குடிகொண்ட நீல மேனியும்
நான்ற வாயும் நாலிரு புயமும்
மூன்று கண்ணும் மும்மதச் சுவடும் (10)


இரண்டு செவியும் இலங்குபொன் முடியும்
திரண்டமுப் புரிநூல் திகழொளி மார்பும்
சொற்பதம் கடந்த துரியமெய்ஞ் ஞான
அற்புதம் நின்ற கற்பகக் களிறே!
முப்பழ நுகரும் மூஷிக வாகன! (15)


இப்பொழு தென்னை ஆட்கொள வேண்டித்
தாயா யெனக்குத் தானெழுந் தருளி
மாயாப் பிறவி மயக்கம் அறுத்துத்
திருந்திய முதலைந் தெழுத்தும் தெளிவாய்ப்
பொருந்தவே வந்தென் உளந்தனில் புகுந்து (20)


குருவடி வாகிக் குவலயந் தன்னில்
திருவடி வைத்துத் திறமிது பொருளென
வாடா வகைதான் மகிழ்ந்தெனக் கருளிக்
கோடா யுதத்தால் கொடுவினை களைந்தே
உவட்டா உபதேசம் புகட்டியென் செவியில் (25)


தெவிட்டாத ஞானத் தெளிவையும் காட்டி
ஐம்புலன் தன்னை அடக்கும் உபாயம்
இன்புறு கருணையின் இனிதெனக் கருளிக்
கருவிக ளொடுங்கும் கருத்தினை யறிவித்(து)
இருவினை தன்னை அறுத்திருள் கடிந்து (30)


தலமொரு நான்கும் தந்தெனக் கருளி
மலமொரு மூன்றின் மயக்கம் அறுத்தே
ஒன்பது வாயில் ஒருமந் திரத்தால்
ஐம்புலக் கதவை அடைப்பதும் காட்டி
ஆறா தாரத்(து) அங்குச நிலையும் (35)


பேறா நிறுத்திப் பேச்சுரை யறுத்தே
இடைபிங் கலையின் எழுத்தறி வித்துக்
கடையிற் சுழுமுனைக் கபாலமும் காட்டி
மூன்றுமண் டலத்தின் முட்டிய தூணின்
நான்றெழு பாம்பின் நாவில் உணர்த்திக் (40)


குண்டலி யதனிற் கூடிய அசபை
விண்டெழு மந்திரம் வெளிப்பட உரைத்து
மூலா தாரத்தின் மூண்டெழு கனலைக்
காலால் எழுப்பும் கருத்தறி வித்தே
அமுத நிலையும் ஆதித்தன் இயக்கமும் (45)


குமுத சகாயன் குணத்தையும் கூறி
இடைச்சக் கரத்தின் ஈரெட்டு நிலையும்
உடல்சக் கரத்தின் உறுப்பையும் காட்டிச்
சண்முக தூலமும் சதுர்முக சூக்கமும்
எண் முகமாக இனிதெனக் கருளிப் (50)


புரியட்ட காயம் புலப்பட எனக்குத்
தெரியெட்டு நிலையும் தெரிசனப் படுத்திக்
கருத்தினில் கபால வாயில் காட்டி
இருத்தி முத்தி யினிதெனக் கருளி
என்னை யறிவித்(து) எனக்கருள் செய்து (55)


முன்னை வினையின் முதலைக் களைந்து
வாக்கும் மனமும் இல்லா மனோலயம்
தேக்கியே யென்றன் சிந்தை தெளிவித்(து)
இருள்வெளி யிரண்டுக்(கு) ஒன்றிடம் என்ன
அருள்தரும் ஆனந்தத்(து) அழுத்தியென் செவியில் (60)


எல்லை யில்லா ஆனந் தம்அளித்(து)
அல்லல் களைந்தே அருள்வழி காட்டிச்
சத்தத்தின் உள்ளே சதாசிவம் காட்டிச்
சித்தத்தின் உள்ளே சிவலிங்கம் காட்டி
அணுவிற்(கு) அணுவாய் அப்பாலுக்(கு) அப்பாலாய்க் (65)


கணுமுற்றி நின்ற கரும்புள்ளே காட்டி
வேடமும் நீறும் விளங்க நிறுத்திக்
கூடுமெய்த் தொண்டர் குழாத்துடன் கூட்டி
அஞ்சக் கரத்தின் அரும்பொருள் தன்னை
நெஞ்சக் கருத்தின் நிலையறி வித்துத் (70)


தத்துவ நிலையைத் தந்தெனை யாண்ட
வித்தக விநாயக விரைகழல் சரணே! (72)


ஓம் கம் கணபதயே நமஹ...!!

தென்னாடுடைய சிவனே போற்றி…!
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி…! போற்றி…!!
மேன்மைகொள் சைவநீதி . . . !
விளங்குக உலகமெல்லாம் . . . !
இன்பமே சூழ்க . . . !
எல்லோரும் வாழ்க . . . ! 

 திருச்சிற்றம்பலம்'' திருச்சிற்றம்பலம்'' "திருச்சிற்றம்பலம்''