Saturday, November 14, 2015

திருவெண்காட்டில் நலமும், வளமும் தரும் விநாயகர் சதுர்த்தி விரத வழிபாடு ! ! ! 15.11.2015


ம்’ எனும் பிரணவ மந்திரம் எல்லாவற்றுக்கும் மூலமாக அமைந்துள்ளது. ‘ஓம்’ எனும் வடிவமாகவும், பிரணவ பொருளாகவும் விநாயகர் விளங்குகிறார்.

‘விநாயகர்’ என்றால் ‘தனக்கு மேலே வேறொரு தலைவன் இல்லாதவன்’ என்று பொருள். விநாயகர் முழு முதற் கடவுள் ஆவார். கணங்களின் தலைவரான கணபதியை உள்ளன்போடு வணங்குபவர்களுக்கு, வருகின்ற விக்கினங்கள், வில்லங்கங்கள், இடர்கள் இடையூறுகள் அனைத்தும் விலகி ஓடும். எனவே தான் அன்று தொட்டு இன்றுவரை அனைவரும் விநாயகர் பூஜையை முதலில் கொண்டாடி வருகிறோம்.

மண்டைதீவு திருவெண்காடு ஸ்ரீ சித்திவிநாயகர் தேவஸ்தானம்
யாழ்ப்பாணம் - இலங்கை


"திருவெண்காடு சுவேதாரணியம்பதி பொன்னம்பலம் பூலோககைலாய புண்ணிய திவ்வியநாம சேஷ்திரத்தில் மூலமூர்த்தியாக வீற்றிருந்து திருவருள் பாலித்துக்கொண்டிருக்கும் ஸ்ரீ அம்பலவாணர் சித்தி விக்கினேஸ்வரப் பிள்ளையார்."

‘சதுர்த்தி’ என்பது ஒரு ‘திதி’. ஒவ்வொரு மாதமும் வளர்பிறையிலும், தேய்பிறையிலும் வருகிற 4–வது நாள் சதுர்த்தி ஆகும். சதுர்த்தியன்று விநாயகப்பெருமானை நோக்கி விரதம் அனுசரிப்பது இந்துக்களிடையே வழக்கமாக உள்ளது.

விநாயகர் மிகவும் எளிமையான கடவுள். யார் கூப்பிட்டாலும் ஓடோடி வந்து அருள் தருவார்.

அதனால்தான் அவர் எல்லாருக்கும் பொதுவாகவும், யாரும் சுலபமாக வழிபடும் வகையிலும் இருக்கிறார்.


விநாயகர் விரதத்தை பார்வதி தேவியே மேற்கொண்டிருக்கிறார். தன் கணவரை அவமதித்து யாகம் நடத்திய தந்தை தட்சனிடம் நியாயம் கேட்கப் போனாள் பார்வதி என்ற தாட்சாயணி. ஆனால், தட்சனோ மிகவும் கர்வம் பிடித்தவன். மருமகனை அவமானப்படுத்தியது போதாதென்று, மகளையும் கேலி பேசினான்.

இந்த அவமானத்தை பொறுத்துக் கொள்ள முடியாத தாட்சாயணி, தட்சன் வளர்த்து வைத்திருந்த யாக குண்டத்தில் அப்படியே பாய்ந்துவிட்டாள்.

அதன்பிறகு, பர்வதராஜனுக்கு மகளாகப் பிறந்து பார்வதி என்னும் பெயருடன் வளர்ந்து வந்தாள்.



சிறு வயதிலிருந்தே கயிலைநாதன்தான் தன் கணவன் என்று தீர்மானமாக இருந்தாள். அவளுடைய அந்த எண்ணம் பலிக்க வேண்டும் என்றால், அவள் விநாயகரை நினைத்து சதுர்த்தி விரதம் மேற்கொள்ள வேண்டுமென்று அவளுடைய தந்தையார் பர்வதராஜன் யோசனை சொன்னார்.

அவர் சொன்னபடியே, மண்ணால் ஒரு விநாயகர் விக்ரகத்தை உருவாக்கினாள் பார்வதி. கூடவே தங்கத்தாலும் ஓர் உருவம் செய்து இரண்டையும் பொற்கும்பம் ஒன்றின் பக்கத்தில் வைத்தாள்.


அந்த விக்ரகங்களுக்கு ஆகம விதிப்படி பூஜைகளை செய்தாள்.

ஆவணி மாத அமாவாசைக்கு அடுத்த சதுர்த்தியில் இப்படி பூஜையை ஆரம்பித்து, பௌர்ணமிக்கு அடுத்த சதுர்த்தி வரையில் தினமும் பூஜை செய்தாள்.

அதற்குப் பிறகு மண் பிள்ளையாரை, மேள தாளத்தோடு ஊர்வலமாக எடுத்துப் போய் நதியிலே இறக்கி விட்டாள். அந்த பதினைந்து நாட்களும் நியம நிஷ்டைகளை மீறாமல் இருந்த விரதத்தின் பலனாக, தான் ஆசைப்பட்டாற்போல கயிலைநாதனை கைப்பிடித்தாள்.


விநாயகர் ஆதி பரம்பொருள். எல்லோருக்கும் மூத்தவர். பிரம்மா, விஷ்ணு, சிவன் என்று எல்லோரையும் உருவாக்கியவர் அவர்தான். அவர் சாதிக்க வேண்டியது நிறைய இருந்ததால் அவர் பலவித அவதாரங்களை எடுத்தார்.

அந்த மாதிரியான ஒரு அவதாரம்தான் சிவன் மகனாக அவர் தோன்றியது. அற்பத் தாவரமான புல்லையும் (அருகம்புல்) அவர் ஏற்றுக் கொள்கிறார். காட்டுப்பூவான எருக்கம்பூவைக் கூட அவர் மறுப்பதில்லை.

அவரைப் பொறுத்தவரை புல் மாலை போட்டவரும் ஒன்றுதான் ரோஜா மாலை போட்டவரும் ஒன்றுதான். வித்தியாசமே பார்க்க மாட்டார். தன்னை வணங்குபவரின் மனம் சுத்தமாக இருக்கிறதா, அந்த மனதில் தனக்கு எத்தகைய இடம் இருக்கிறது என்பதை மட்டும்தான் பார்ப்பார்.



‘மூஷிக வாஹன மோதகஹஸ்த
சாமரகர்ண விளம்பிதஸீத்ர!
வாமனரூப மஹேஸ்வரபுத்ர
விக்ன விநாயக பாத நமஸ்தே!!’

லாபம் தரும் பிள்ளையார்

  • மண்ணால் செய்த பிள்ளையாரை வழிபட்டால் நற்பதவி கிடைக்கும்.
  • புற்றுமண்ணால் உருவாக்கிய பிள்ளையாரை வணங்கி வழிபட வியாபார லாபம் கிடைக்கும்.
  • உப்பினால் உருவான விநாயகரை வணங்கிட எதிரிகள் அழிந்து நிம்மதி பிறக்கும்.
  • கல்லால் அமைந்த விநாயகரை வணங்கிட வெற்றிகிட்டும்.
  • வெள்ளெருக்கால் செய்த பிள்ளையாரை வழிபட செல்வம் சேர்ந்து மகிழ்ச்சி நிலவும்.
  • மஞ்சள் பொடியால் ஆன பிள்ளையாரை வழிபட சகல காரியங்களும் நன்றாக நடக்கும்.
  • வெல்லத்தினால் செய்யப்பட்ட பிள்ளையாரை வழிபட வாழ்வு வளம்பெறும்.
  • பதஞ்சாணியால் உருவாக்கப்பட்ட பிள்ளையாரை வழிபட வியாதிகள் நீங்கி வளம்பிறக்கும்.

ஓம் கம் கணபதயே நமஹ...!!

தென்னாடுடைய சிவனே போற்றி…!
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி…! போற்றி…!!
மேன்மைகொள் சைவநீதி . . . !
விளங்குக உலகமெல்லாம் . . . !
இன்பமே சூழ்க . . . !
எல்லோரும் வாழ்க . . . ! 

திருச்சிற்றம்பலம்'' திருச்சிற்றம்பலம்'' "திருச்சிற்றம்பலம்''