Friday, November 27, 2015

திருவெண்காட்டில் அஷ்ட ஐஸ்வர்யங்களும் தரவல்ல பிள்ளையார் பெருங்கதை விரதம் அனுஸ்டானங்கள் ! 26.11.2015 - 16.12.2015 சிறப்புக்கட்டுரை .


ஓம்
கஜானனம் பூதகணாதி ஸேவிதம் கபித்த ஜம்பூ பலஸார பக்ஷிதம்
உமா ஸுதம் சோக வினாச காரணம் நமாமி விக்னேச்வர பாத பங்கஜம்

சாரம்:
யானையினுடய முகம் படைத்தவரும், பூதகணங்களால் ஸேவிக்கப்படுபவரும், பழுத்த ஜம்பூ பழத்தின் ரசத்தை சாப்பிடுபவரும், உமாவின் (பார்வதீ தேவியின்) குமாரரும், நம்முடைய துக்கத்தைப் போக்குவதற்குக் காரணபூதராக விளங்குபவரும், விக்னங்களுக்கே (தடங்கல்களுக்கு) ஈஸ்வரரும் (அதிபதி) ஆகிய கணபதி பகவானின் பாதகமலங்களில் தண்டனிடுகிறேன்.


மண்டைதீவு திருவெண்காடு ஸ்ரீ சித்திவிநாயகர் தேவஸ்தானம்
யாழ்ப்பாணம் - இலங்கை


''இராஐ ராஐனே யோகநாதனே சித்தி கணபதியே அருள் தருவாய்
காக்க காக்க கணபதி காக்க சித்திவிநாயகா துணைபுரிவாய்''

"திருவெண்காடு, சுவேதாரணியம்பதி, பொன்னம்பலம், பூலோககைலாய, புண்ணிய திவ்வியநாம சேஷ்திரத்தில் மூலமூர்த்தியாக வீற்றிருந்து திருவருள் பாலித்துக்கொண்டிருக்கும் ஸ்ரீ அம்பலவாணர் சித்தி விக்கினேஸ்வரப் பிள்ளையார்."

விநாயகர் விரதம்

விநாயகர் விரதங்கள் பல. அவற்றுள் கார்த்திகை மாசம் அபரபக்கப் பிரதமை முதல் மார்கழி மாசத்துப் பூர்வ பக்கச் சஷ்டி வரையும் உள்ள இருபத்தொரு நாட்கள் அனுஷ்டிக்கும் விரதமும் ஒன்றாகும். இது, விஷ்ணு மூர்த்தியை பாம்பாக இருக்கும்படி தேவி சபித்ததை விமோசனஞ் செய்யச் சாதனமாயிருந்தது. இவ்விரதம் இவ்வருடம் 26.11.2015 வியாழக்கிழமை இலங்கை, இந்தியா ஆகிய நாடுகளிலும் ஆரம்பமாவதாக வாக்கிய பஞ்சாங்கம் கணிக்கின்றது.

யாழ்ப்பாணத்தில் இருபத்தொரு நாளும் நியமமாக விநாயக வழிபாட்டுடன் அனுஷ்டிப்பவர்கள் பலர் இன்றுமுளர். மண்டைதீவு திருவெண்காடு சித்தி விநாயகர் ஆலயத்திலும் சாந்தை சித்தி விநாயகர் ஆலயத்திலும், பறாளை ஈஸ்வர விநாயகர் ஆலயத்திலும் இவ்விழா வெகு சிறப்பாக அனுஷ்டிக்கப்பெறுகின்றது.


ஆடவர் வலக்கையிலும் பெண்கள் இடக்கையிலும் இருபத்தொரு இழையாலாகிய நூல் காப்பு அணிந்து விரதமிருத்தல் வேண்டும். இப்படிச் செய்ய இயலாதோர் மார்கழி மாத விநாயகர் சஷ்டியினன்று விரத சீலராக இருப்பது இன்பமூலமாகும். தன வைசியர்கள், மரகத விநாயகரைச் சஷ்டியினன்று மிகவும் வழிபாடு செய்து வருகின்றனர். "சாந்த" வழிபாடுகள் செய்யும் மக்கள் விரதங்களை அனுஷ்டிக்கின்றனர். விநாயகர், சுப்பிரமணியர், சிவன், சத்தி வணக்க உடைமையால் ஆன்ம உய்தி பெறலாம்.


விநாயகரை வணங்குவது எப்படி?

இருகைகளையும் முட்டியாகப் பிடித்து வலது கையால் வலது நெற்றியிலும், இடது கையால் இடது நெற்றியிலும் (இரு கைகளாலும் ஒரே தடவையாக) 3 முறை குட்டி; அதன் பின் இடது கையால் வலது காதையும், வலது கையால் இடது காதையும் பிடித்து மூன்று முறை தோப்பிக் கரணம் செய்தல் வேண்டும். குறுக்காக கைகள் வைத்து காதுகளைப் பிடிக்கும் போது வலது-கை வெளிப்பக்கமாக அமைதல் வேண்டும். இடது கை நெஞ்சோடு இருத்தல் வேண்டும். கைகளால் நெற்றியில் குட்டும் போதும் தோப்பிகரணம் செய்யும் போதும் "ஒம் கணேசாய நம" என்ற மந்திரத்தை உச்சரித்தல் வேண்டும்.


விநாயகர் வாழ்த்து


கலியுகத் தெய்வமே கந்தனுக்கு மூத்தோனே
முஷிக வாகனனே மூலப் பொருளோனே
ஸ்கந்தகுரு கவசத்தை கலிதோஷம் நீங்கிடவே
திருவடியின் திருவருளால் செப்புகிறேன் காத்தருள்வாய்
சித்தி விநாயக ஜயமருள் போற்றுகிறேன்.

சிற்பர கணபதே நற்கதியும் தந்தருள்வாய்
கணபதி தாளிணையைக் கருத்தினில் வைத்திட்டேன்
அச்சம் தீர்த்து என்னை ரக்ஷித்திடுவீரே.

தலையில் குட்டி தோப்புக்கரணம் போடுவது ஏன்?

அகத்தியர் கமண்டலத்தில் கொண்டு வந்த கங்கை நதியை காகம் வடிவில் வந்த விநாயகர் கவிழ்த்தார். பின்னர் அந்தணச் சிறுவன் வடிவில் அகத்தியர் முன்பு வந்து நின்றார். கோபம் கொண்ட அகத்தியர் விநாயகரின் தலையில் குட்டினார். அப்போது விநாயகர் சுயரூபம் எடுத்து உலக நன்மை கருதி காவிரியை உருவாக்க அப்படி செய்ததாகக் கூறினார். அகத்தியர் தன் தவறுக்காக வருந்தி தன் தலையிலேயே குட்டிக் கொண்டார். அன்று முதல் விநாயகருக்குத் தலையில் குட்டி வழிபடும் வழக்கம் வந்தது.

கஜமுகாசுரன் என்ற அசுரன் மகாதர் என்ற முனிவருக்கும் விபுதை என்ற அசுரப் பெண்ணக்கும் மகனாக பிறந்து மாதங்கபுரத்தை ஆட்சி புரிந்து வந்தான். இவன் சிவபிரானை நோக்கிப் பெருந்தவம் புரிந்து யாதோர் ஆயுதத்தினாலும் அழியாவரமும் பெற்றான். தான் பெற்றவரத்தினால் செருக்கடைந்து இந்திராதி தேவர்களைத் துன்புறுத்தினான். இவனுடைய கட்டளையை ஏற்றுச் செய்வதில் சலிப்படைந்த தேவர்கள் சிவபிரானிடம் முறையிட்டனர்.


சிவபிரான் ஆணைப்படி விநாயகப்பெருமான் கஜமுகனுடன் பெரும் போர் புரிந்தார். விண்ணும் மண்ணும் அதிர்ந்தன. இறுதியில் விநாயகர் தமது வலக்கொம்பை முறித்து சிவமந்திரத்தை கூறி ஏவினார். அந்த ஞானமேயாய தந்தம் கஜமுகாசுரனைப் பிளந்தது. மாயா வரம் பெற்ற அவன் மீது கருணை மழை பொழிந்தார் அவனுடைய அறியாமை அகன்றது மெய்யுணர்வு பெற்றான் விநாயகரைப் பணிந்து வணங்கினான். வந்த மூஷிகத்தை வாகனமாக்கிக் கொண்டார்.

விநாயகர் வானவர்கள் மலர் மழை பொழிந்தார்கள். ஆனை முகத்தண்ணலே ! நாங்கள் இத்தனை காலமும் கஜமுகாசுரனுக்கு காலை நண்பகல் மாலை நேரங்களில் ஆயிரத்தெட்டு தோப்புக்கரணம் போட்டோம். இனி தேவர் மீது அதனைச் செய்ய அருள் புரிக என்று வேண்டிக் கொண்டானர் விநாயகர் புன்முறுவல் பூர்த்து மூன்று முறை தோப்புக்கரணம் போட்டால் போதும் என்று கூறி அருள் புரிந்தருளினார்.


அன்று முதல் இன்றுவரை தேவர்களும் அடியவர்களும் மூன்றுமுறை அப்பொருமான் முன் தோப்புக்கரணம் இடுவதனால் அறிவு வளர்ச்சியும் உடல் நலனும் உண்டாகும் விநாயகரின் பெருங்கருணைக்கும் உரியவராகின்றார். கஜமுகாசுரனை விநாயகர் வெற்றி பெற்றதினால் மனமகிழ்ந்த சிவபெருமான் கணங்களுக்கெல்லாம் தலைவராக்கி கணபதி கணேசர் கணாதிபன் கணநாதன் என வாழ்த்தி வரமும் கொடுத்தார்.


வாக்குண்டாம் நல்ல மனமுண்டாம் மாமலராள்
நோக்குண்டாம் மேனி நுடங்காது-பூக்கொண்டு
துப்பார் திருமேனித் தும்பிக்கை யான்பாதம்
தப்பாமற் சார்வார் தமக்கு.

தேங்காயை சிதறு காயாக உடைப்பது ஏன்?

மகோற்கடர் என்கிற முனிவராக அவதாரம் செய்த விநாயகர் காசிப முனிவரின் ஆஸ்ரமத்தில் தங்கியிருந்தார். ஒரு யாகத்திற்கு புறப்பட்ட போது ஒரு அசுரன் அவர்களைத் தடுத்து நிறுத்தினான். விநாயகர் யாகத்திற்காகக் கொண்டு சென்ற கலசங்களின் மேலிருந்த தேங்காய்களை அவன் மீது வீசி அந்த அசுரனைப் பொடிப் பொடியாக்கினார். எந்த செயலுக்கு கிளம்பினாலும் தடைகள் ஏற்பட்டால் அதை உடைக்க விநாயகரை வணங்கிச் செல்லும் வழக்கமுண்டு. தனக்கு வந்த தடையைத் தேங்காயை வீசி எறிந்ததன் மூலம் தகர்த்தார். அதன் மூலம் விக்னங்களை தகர்த்த விக்னேஸ்வரர் என்ற பெயரும் ஏற்பட்டது. சிதறுகாய் உடைக்கும் வழக்கமும் உருவானது.


விரதத்தின் போதும், கிரியைகள் செய்யும் போதும் தர்ப்பை அணிவது ஏன்?

தர்ப்பைப் புல்லுக்கு மற்றைய புற்களைப் போலல்லாது விஷேச குணம் ஒன்றுள்ளது. அதாவது மின்சாரத்தை எல்லா உலோகங்களும் கடத்தக் கூடியவை. ஆனால் அவற்றுள் செப்பு-உலோகம் அதனை வெகு சுலபமாக கடத்தும் வல்லமை கொண்டுள்ளது. அதனால்தான் அதனை மின் பாவனையின் போது அதிகமாக பயன் படுத்துகின்றார்கள்.

அது போலவே தர்ப்பைப் புல்லுக்கும் கிரியைகளின் போது சொல்லப் பெறும் மந்திரங்கள் கிரகிக்கும் தன்மையும், அதனை அணிந்திருப்பவருக்கு போசிக்கும் திறனும் கொண்டுள்ளது. அதனால் கிரியைகளின் போது சொல்லப் பெற்ற மந்திரங்களின் முழுச் சக்தியும் அதனை அணிந்திருப்பவருக்கு கிடைக்கின்றது.


அருகம்புல் மாலை ஏன்?

அனலாசுரன் என்ற அசுரன் தேவர்களை மிகவும் துன்புறுத்தி வந்தான். தன்னை எதிர்ப்பவர்களை அனலாய் மாற்றித் தகித்து விடுவான். இவனை பிரம்மாவாலும் ,தேவேந்திரனாலும் அடக்க முடியவில்லை. அவர்கள் சிவ, பார்வதியைச் சந்தித்து முறையிட்டனர். சிவனும் விநாயகருக்கு அந்த அரக்கனை அழித்து வரும்படி கட்டளையிட்டார். விநாயகரும் பூத கணங்களுடன் போருக்குச் சென்றார். அங்கு சென்றதும் அனலாசுரன் பூதகணங்களை எரித்துச் சாம்பலாக்கினான். விநாயகர் அனலாசுரனுடன் மோதினார். ஆனால் அவனை வெற்றி கொள்ள முடியவில்லை. கோபத்தில் அவனை அப்படியே விழுங்கி விட்டார்.

வயிற்றுக்குள் சென்ற அனலாசுரன் அதை வெப்பமடையச் செய்தான். விநாயகருக்கு அந்த வெப்பத்தைத் தாங்க முடியவில்லை. அவருக்கு குடம் குடமாகக் கங்கை நீர் அபிஷேகம் செய்யப்பட்டது. அதனால் எந்த பயனும் ஏற்படவில்லை. இந்நிலையில் ஒரு முனிவர் அருகம்புல்லைக் கொண்டு வந்து விநாயகரின் தலை மேல் வைத்தார். அவரது எரிச்சல் அடங்கியது. அனலாசுரனும் வயிற்றுக்குள் ஜீரணமாகி விட்டான். அன்று முதல் தன்னை அருகம்புல் கொண்டு அர்ச்சிக்க வேண்டுமென விநாயகர் கட்டளையிட்டார்.


பெருச்சாளி எப்படி விநாயகரின் வாகனமானது?:

மாகத முனிவருக்கும் வீபூதி என்ற அசுரப்பெண்ணிற்கும் பிறந்த அசுரன் கஜமுகன். இவன் சிவபெருமானை நோக்கித் தவமிருந்து எந்த ஆயுதங்களாலும் அழியாத வரம் பெற்றான். வரம் பெற்ற மமதையில் இந்திடன் முதலான தேவர்களுக்கு இடர் விளைவிக்க, அவர்கள் சிவபெருமானிடம் முறையிட்டனர்.

சிவ-சக்தியின் வேண்டுதலினால் விநாயகர் தன் பூதப்படைகள் சூழ கஜமுகனின் மதங்கபுரத்தை முற்றுகையிட்டார். போர் மூண்டது. அவன் விட்ட பாணங்களை எல்லாம் விநாயகர் தன் கையில் உள்ள உலக்கையினால் தடுத்து, அதனைக்கொண்டே அவனை அடித்தார். கஜமுகன் மயங்கி விழுந்தான். ஆனால் இறக்கவில்லை. அவன் பெற்றவரம் நினைவுக்கு வரவே, விநாயகர் தன் கொம்புகளில் ஒன்றை ஒடித்து அவன் மீது ஏவினார். அவன் பெருச்சாளியாக (மூஷிஹம்) உருமாறி விநாயகரைத் தாக்க வந்தான். விநாயகர் அதனை அடக்கி தன் வாகனமாக்கிக் கொண்டார்.


ஒரு முறை சிவபெருமானும் உமாதேவியும் சொக்கட்டான் விளையாடிக் கொண்டிருந்த போது மகாவிஷ்ணு பொய்ச்சாட்சி சொல்லும்படி ஆகிவிட்டது (அவ்விளையாட்டில் சிவபெருமான் தோற்றுப் போகவே சிவபெருமான் சாட்சியாக நின்ற மகாவிஷ்ணுவை பார்த்து கண்ணால் ஜாடை காட்டி யார் வென்றது எனக் கேட்ட்க விஷ்ணுவும் செய்வதறியாது தோற்றவராகிய சிவபெருமானே வென்றதாகவும்,வென்ற உமாதேவியார் தோற்று விட்டதாகவும் பொய்ச்சாட்சி கூறிவிட்டார். அதனால் கோபமுற்ற உமாதேவி மகாவிஷ்ணுவைக் குருட்டு மலைப் பாம்பாகப் போகுமாறு சபித்துவிட்டார். அவருக்கு ஆறுதல் கூறிய சிவபெருமான் கயமுகாசுரவதம் நடைபெறும் வரைகாத்திருக்குமாறு சென்னார்.


ஆனைமுகன் ஆறுமுகன் அம்பிகை பொன்னம் பலவன் ஞானகுரு வாணிபதம் நாடு .......ஓம் அரஹர அரஹர மகாதேவா ......சிட்சபேசா .....சிவ சிதம்பரம் ...என்னாடுடைய சிவனே போற்றி என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி ....இன்பமேசூழ்க ...எல்லோரும் வாழ்க.......சிவசிவ ....சிவசிவ ...சிவசிவ ....ஸ்ரீ ...மகாதேவா......!!!!

விநாயகர் கயமுகாசுரனுக்கு முத்தி கொடுத்த பின்னர் கணபதீச் சரத்தில் இருந்து மூஷிஹ வாகனத்தில் திரும்பும் வழியில் ஆலங்காட்டில் மலைப் பாம்பாக மாறி இருந்த மகாவிஷ்ணுவைக் கண்ணுற்றார். அவர் பார்வை பட்ட மாத்திரத்தில் மகாவிஷ்ணு தம் சுய உருவைப் பெற்றார். மகிழ்ச்சி அடைந்தார்

விநாயகரே! எனக்குக் காட்சியளித்து நன்மை புரிந்த இந்த மார்கழித் திங்கள் சஷ்டி நாளில் உம்மை யார் வழிபட்டாலும் அவர்கள் சகல துயரங்களில் இருந்தும் விடுபட்டுச் சகல விருப்பங்களையும் அடையும் படி அருள்புரியவேண்டும் என்று கோரினார். அதற்கு விநாயகரும் மகிழ்ச்சியோடு இசைந்தார்.


இது விநாயக சஷ்டி என்றும் மார்கழி சஷ்டி, குமார சஷ்டி, பெருங்கதை விதரம் என்றும் கூறப்பெறுகிறது. கார்த்திகைத் திங்கள் கிருஷ்ண பட்சப் பிரதமை முதலாக மார்கழித் திங்கள் (வளர்பிறை) சஷ்டி இறுதியாகவுள்ள இருபத்தொரு நாளும் இந்த விரதம் கடைப்பிடிக்கப்பெறுகிறது. சைவர்களுக்கு இக்காலம் மிகவும் புனிதமான காலமாகும்.

21 நாட்களும் ஒரு பொழுது உண்டு இறுதி நாளில் உபவாசம் இருந்து இளநீர் கரும்பு மோதகம் அவல் எள்ளுண்டை முதலானவற்றை நிவேதித்து சிறப்பு வழிபாடு செய்ய வேண்டும் 21 நாட்களும் பெருங்கதை எனப்பெறும் விநாயக புராணம் (பார்க்கவ புராணம் ) படிக்க வேண்டும் கேட்க வேண்டும் ( இந்த 21 நாட்களிலும் விநாயக கவசத்தை நாள் ஒன்றுக்கு 21முறை பாராயணம் செய்தால் நினைத்த காரியம் கைகூடும்).அடுத்த சஷநாள் ஏழை எளியவரோடு இருந்து உணவு உண்டு விதரத்தை நிறைவேற்ற வேண்டும்.


பிள்ளையாரின் திருமணம்:

பிரம்மதேவனுக்கு புத்தி, சித்தி என்ற இரண்டு புத்திரிகள் இருந்தனர். பிரம்மதேவர் அவர்களை விநாயகருக்கு மணம் முடித்து வைக்க விரும்பினார். அதனால் அவர் நாரதரைஅழைத்து தன் விருப்பத்தை கூறி, விநாயகரிடம் தூது அனுப்பினார்.

நாரதரும் விநாயகரிடம் சென்று தன் இயல்பான கலகமூட்டும் வேலையைச் செய்யாமல் ஒழுங்காக வந்த விஷயத்தைக் கூறினார். புத்தியையும், சித்தியையும் அங்கம் அங்கமாக வர்ணித்து இப்படிப்பட்டவர்களை மணக்க நீங்கள் கொடுத்து வைத்திருக்க வேண்டும் என்று கூறி விநாயகரின் மனத்தில் ஆசையை ஏற்படுத்தினார். பிள்ளையாரும் சம்மதித்தார். நாரதர் நேராகச் சென்று விஷயத்தை பிரம்மனிடம் கூறி விட்டார். பிரமனும் முறைப்படி சிவபெருமானையும் பார்வதியையும் பார்த்து விஷயத்தைக் கூறவே சிவபெருமானும் பார்வதியும் தங்களின் சம்மதத்தைத் தெரிவித்து விட்டனர்.


திருமணத்திற்கு நாளும் குறிக்கப்பட்டு விட்டது. விஸ்வகர்மா (தேவதச்சன்) திருமணத்துக்கு என்று சொர்க்கலோகத்தை விட சிறப்பான ஒரு நகரத்தை நிர்மாணித்தான். திருமணத்தைக் காண அனைத்து லோகங்களிலிருந்தும் கூட்டம் கூடிவிட்டது. அவர்களின் பசியைத் தணிக்க காமதேனு அவர்களுக்கு உணவு அளித்துக் கொண்டே இருந்தது. திருமண நாளும் வந்தது.

சித்தியை லட்சுமி தேவியும், புத்தியை இந்திராணியும் அலங்கரித்து மணமேடைக்கு அழைத்து வந்தனர். நூறாயிரம் கோடி தேவர்கள் மந்திரம் முழங்க, சித்தி, புத்தி இருவரின் கழுத்திலும் விநாயகர் மங்கள நாண் பூட்டினார். பிறகு திருக்கயிலாயம் சென்று பெற்றோரிடம் ஆசி வாங்கி அமைதியாக இல்லறம் நடத்தலானார்.


அது எப்படியோ அண்ணனாகிய பிள்ளையாருக்கும், தம்பியாகிய முருகனுக்கும் இருதுணைவிகள் அமைந்துவிட்டனர். முருகனுக்கு வள்ளியும், தெய்வானையும் இரு மனைவியர் என்பது எப்படி இச்சா சக்தி, கிரியா சக்தியாகிய தத்துவம் என்று கூறப்படுகிறதோ, அதைப் போல விநாயகப் பெருமானின் சித்தி, புத்தி என்பதும் அவரது சக்திகளே என்றும் கூறப்படுவதுண்டு.


ஓம் கம் கணபதயே நமஹ...!!

தென்னாடுடைய சிவனே போற்றி…!
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி…! போற்றி…!!
மேன்மைகொள் சைவநீதி . . . !
விளங்குக உலகமெல்லாம் . . . !
இன்பமே சூழ்க . . . !
எல்லோரும் வாழ்க . . . ! 

திருச்சிற்றம்பலம்'' திருச்சிற்றம்பலம்'' "திருச்சிற்றம்பலம்''