Saturday, November 12, 2016

திருவெண்காடு புண்ணிய சேஸ்திரத்தில் இன்று சனி மஹா பிரதோஷம் ! ! ! 12.11.2016 🌿🌟🌿


சனி மஹா பிரதோஷ விரதமிருந்து நமது மண்டைதீவு திருவெண்காடு ஸ்ரீ சித்திவிநாயகர் தேவஸ்தானத்தில் அகிலாணடகோடி பிரம்மாண்ட நாயகனாய், கருணைக்கடலாய் எழுந்து அருள் பாலிக்கும் ஸ்ரீ சிவகாமசுந்தரி அம்பாள் சமேத ஸ்ரீமத் ஆனந்த நடராஐமூர்த்தியையும் அருள்மிகு ஸ்ரீ காசிவிசாலாட்சி அம்பாள்  உடனுறை ஸ்ரீ காசிவிஸ்வநாத மூர்தியையும்  வணங்கி ஐந்து வருடங்கள் சிவ வழிபாடு செய்த பலன்களை பெறலாம்...

தினம் தோறும் மாலை 4.30 மணி முதல் 6. 00 மணி வரையிலான காலம் நித்ய பிரதோஷ காலம் எனப்படும். இந்த சமயத்தில் இறைவனை வழிபடுவது மிகவும் சிறப்பு ஆகும். மாதம் தோறும் வரும் வளர்பிறை மற்றும் தேய்பிறை திரயோதசி தினங்களில் மாலை 4.30 மணி முதல் 6.00 மணி வரையிலான காலம் மாதப் பிரதோஷம் எனப்படும்.

திருவெண்காடு அமர்ந்த அரசே போற்றி!! 
திருவெண்காடுறைவோன்  போற்றி! போற்றி!!
அருள்மிகு சிவகாம சுந்தரி உடனாய் 
அருள்மிகு நடராஜர் திருவடிகள் போற்றி!
அருள்மிகு  நந்தியம்பெருமான்  திருவடிகள் போற்றி!  போற்றி!

மஹா பிரதோஷம் :🌿

மாதங்களில் தேய்பிறை அல்லது வளர்பிறை திரயோதசியுடன் சனிக்கிழமை கலந்து வந்தால் அது மஹா பிரதோஷம் என்று வழங்கப்படுகிறது. இவை சித்திரை வைகாசி, ஐப்பசி கார்த்திகை மாதங்களில் வந்தால் மிகவும் உத்தமம் என்று புராணங்களும் ஆகமங்களும் கூறுகின்றன.

சனிக்கிழமையில் வரும் பிரதோஷம் சனி பிரதோஷம் என்று அழைக்கப்படுகிறது. இத்தகைய சிறப்பு வாய்ந்த சனி பிரதோஷம் நாளை சிறப்பாக அனைத்து சிவன் கோவில்களிலும் கொண்டாடப்படுகிறது. சாதாரண பிரதோஷ வழிபாடு தரும் பலன்கள் போன்று ஆயிரம் மடங்கு பலன் தரக்கூடியது இந்த சனி பிரதோஷம்.

ஈஸ்வரனையும், சனிஸ்வரனையும் அன்று விரதமிருந்து வழிபடுவதால் சனி பிரதோஷத்துக்கு கூடுதல் சிறப்பு கிடைத்துள்ளது. சிவபெருமான் தேவர்களை காப்பாற்ற ஆலகால நஞ்சை உண்ட நாள் சனிக்கிழமை. எனவே, பிரதோஷ நேரம் சனிக்கிழமை அன்று வரும் சனி பிரதோஷம் என சிறப்பு பெறுகிறது.
இத்தகைய சிறப்பு வாய்ந்த சனி பிரதோஷத்தன்று எவ்வாறு விரதம் இருக்க வேண்டும் என்று பார்க்கலாம். 

பிரதோஷ தினத்தில் அதிகாலையில் நீராடி திருநீறனிந்து சிவ நாமம் ஆன நமசிவாய ஓதி உபவாசம் இருக்க வேண்டும். அன்று காலை முதல் பிரதோஷம் முடியும் வரை உணவு தவிர்த்து பிரதோஷ தரிசனம் முடித்து பிரசாதம் உண்டு விரதம் முடிக்க வேண்டும். பின்னர் இரவு உணவு சாப்பிடலாம். இப்படி பதினோறு பிரதோஷங்கள் விரதம் இருந்து சிவனை வழிபட்டால் சிவனருள் கிடைக்கும்.

ஒரு சனிப்பிரதோஷத்தன்று சிவாலயம் சென்றால்,ஐந்து வருடங்கள் தினமும் சிவாலயம் சென்றுவந்த புண்ணியம் கிடைக்கும் என அனுபவம் மிக்க சிவனடியார்கள் தெரிவிக்கின்றனர்.

இன்று நாள் முழுக்க முழு விரதம் இருந்து, நீர் ஆகாரம் மட்டும் எடுத்து, மாலையில் பிரதோஷ வேளையில் சிவன் கோயிலுக்குச் செல்ல வேண்டும்.

ஒரு பிடி அருகம் புல்லை நந்தியின் கொம்புகளுக்கிடையில் அர்ப்பணித்து, விளக்கேற்றி நந்தியையும் சிவனையும் வில்வ இலைகளால் அர்ச்சனை செய்து தொழுதால்... சனி பகவானால் உண்டாகும் சகல துன்பங்களும் விலகிப் போகும், திருமண வரம் கிட்டும், பிள்ளைப்பேறு உண்டாகும், வழக்கில் வெற்றி கிட்டும், கல்வி செல்வம், பொருட்செல்வம் கிடைக்கும், துன்பம் அகலும், சகல சௌபாக்கியங்களும் கிட்டும், லட்சுமி கடாட்சம் கிடைக்கும்.

மாலையில் நடக்கும் சிவ பூஜையில் கலந்து கொண்ட பிறகு பிரசாதம் பெற்று விரதத்தை முடிக்கலாம்.