Monday, November 14, 2016

திருவெண்காடு புண்ணிய சேஷ்திரத்தில் இரத்தினசபாபதிக்கு மாபெரும் அந்தஸ்து தரும் ஐப்பசி பௌர்ணமி அன்னாபிஷேகம். 14.11.2016


துன்முகி ஆண்டு ஐப்பசி மாதம் 29ஆம் நாள் (14-11-2016). திங்கள் கிழமை . முழு நிலவுப் பெருநாள் (பௌர்ணமி) . 

சகல சிவாலயங்களிலும் அன்னாபிஷேகம் நடைபெறும். இவ்வாண்டு வரும் ஐப்பசி மாத முழு நிலவுப் பெருநாள் திங்கட்கிழமை வருவது மிகவும் சிறப்பு . இத்திருநாளில் இறைவனுக்கு அன்னாபிஷேகம் செய்ய நம்மால் இயன்ற பொருளை அருகிலுள்ள ஆலயங்களுக்கு வழங்கி இறைவனை அன்ன அலங்காரத் திருக்கோலத்தில் கண்டு வணங்கி மகிழ்ந்து இம்மையிலும் மறுமையிலும் எல்லா நலமும் வளமும் பெற்று இன்புற்று வாழ வேண்டுகிறோம்.

திருநாவுக்கரசு சுவாமிகள் அருளிய கோயில் (சிதம்பரம்) திருப்பதிகம்

அன்னம் பாலிக்குந் தில்லைச்சிற் றம்பலம்
பொன்னம் பாலிக்கு மேலுமிப் பூமிசை
என்னம் பாலிக்கு மாறுகண் டின்புற
இன்னம் பாலிக்கு மோஇப் பிறவியே.

தில்லையிலே அனுதினமும் காலை பதினோறு மணியளவில் இரத்தினசபாபதிக்கு அன்னாபிஷேகம் நடைபெற்று அந்த அன்னம் பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதமாக வழங்கப்படுகின்றது. எனவேதான் இத்தலத்தை அப்பர் பெருமான் அன்னம் பாலிக்கும் தில்லைச் சிற்றம்பலம் என்று சிறப்பித்துப் பாடினார். இந்த அன்னாபிஷேகத்தை தரிசித்து பிரசாதத்தை ஏற்றுக் கொண்டவர்களுக்கு என்றுமே அன்ன ஆகாரத்திற்கு கவலையே இல்லை.

திருவெண்காடு அமர்ந்த அரசே போற்றி!! 
திருவெண்காடுறைவோன் போற்றி! போற்றி!!
அருள்மிகு சிவகாம சுந்தரி அம்பாள் உடனாய் 
அருள்மிகு ஆனந்த  நடராஜர்மூர்தித்தி  திருவடிகள்  போற்றி!
அருள்மிகு காசிவிசாலாட்சி அம்பாள் உடனாய் 
அருள்மிகு காசிவிஸ்வநாதமூர்த்தி  திருவடிகள்  போற்றி!

வேதத்திலே ஒரு இடத்தில் “அஹமன்னம், அஹமன்னம், அஹமன்னதோ” என்று கூறப்பட்டுள்ளது, அதாவது எங்கும் நிறைந்திருக்கும் பரம்பொருள் அன்னத்தின் வடிவில் இருப்பதாக கூறப்பட்டுள்ளது. அன்னம்தான் உலகில் வாழும் அனைத்து ஜீவராசிகளுக்கும் உயிர்நாடி. உலக வாழ்கைக்கு அச்சாணி. அன்னம் பிரம்ம, விஷ்ணு, சிவ சொரூபம். அம்மை பார்வதியும் எல்லா ஜீவராசிகளுக்கும் படியளக்கும் அன்னபூரணியாகவும் தானே காசியிலே அருட்காட்சி தருகின்றாள்.

இறைவனின் அருவுருவத் திருமேனியான லிங்க மூர்த்திக்கு அன்னம் சார்த்தி வழிபடும் நாளே அன்னாபிஷேக நாள், ஐப்பசி பௌர்ணமி நாள். அமுது படைக்கும் அந்த ஆண்டவனுக்கே அமுது படைக்கும் விழா தான் அன்னாபிஷேகம். ஐப்பசி மாதப் பௌர்ணமியன்று சகல சிவாலயங்களிலும் பரம கருணைக் கடலாம் ஐயன் சிவபெருமானின் அருவுருவமான லிங்கத்திருமேனிக்கு அன்னாபிஷேகம் செய்யப்படுகின்றது.

பௌர்ணமியன்று சந்திரன் தனது பதினாறு கலைகளுடன் பூரண சோபையுடன் விளங்குகின்றான். அன்று அவனது கலை அமிர்த கலையாகும். அத்தகைய ஐப்பசி பௌர்ணமியன்று அன்னம் படைத்து சிவனுக்கு அபிஷேகம் செய்து பக்தர்களுக்கு அன்னம் அளிப்பது பெரும் புண்ணியத்தைத் தர வல்லதாகும்.

சிவன் பிம்பரூபி, அவரது மெய்யன்பர்கள் பிரதி பிம்ப ரூபிகள். பிம்பம் திருப்தி அடைந்தால் பிரதி பிம்பம் திருப்தி பெறும். அனைவருக்கும் அன்னம் பாலிக்கும் அந்த அன்ன பூரணியை தனது வாம பாகத்திலே கொண்ட அந்த மாதொரு பாகனை அன்னாபிஷேகம் செய்து வழிபடுவதால் உலகில் பஞ்சம் வராது என்பது உண்மை.

அன்னாபிஷேகத்தன்று எம்பெருமானின் மேனியிலே சாற்றப்படுகின்ற ஒவ்வொரு பருக்கை அன்னமும் ஒரு சிவலிங்கம், எனவே அன்று சிவதரிசனம் செய்தால் கோடி சிவதரிசனம் செய்வதற்கு சமம். சிவன் அபிஷேகப்பிரியர். மொத்தம் 70 பொருட்களால் அவரை அபிஷேகம் செய்யலாம் அவற்றுள் ஒன்றுதான் சுத்த அன்னம். சிவபெருமானுக்கு அன்னத்தால் அபிஷேகம் செய்வது பெருஞ் சிறப்புடையதாகும்.

ஆலய வழிபாட்டில் மாத பௌர்ணமியன்று ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு நடசத்திரத்திற்கு உரிய பொருளால் சிவபெருமானை வழிபடுவது விஷேமானதாகும். ஐப்பசி மாதம் இவ்வாறே அஸ்வினி நட்சத்திரத்திற்குரிய அன்னத்தால் வழிபடுவது சிறப்பானது. முறையாக சிவபெருமானுக்கு ஐப்பசி பௌர்ணமியன்று அன்னாபிஷேகம் செய்து வழிபடுவதால் உலகம் முழுவதும் 
வளமாக விளங்கும் என்று சிவாகமம் கூறுகின்றது.
சிவன் பரம்பொருள், அவனது பிரதிபிம்பமே அனைத்து ஜீவராசிகளும், இரண்டும் வேறல்ல. அபிஷேக அன்னப்போர்வையால் ஐயன் அகமும் புறமும் குளிரும் போது எல்லா ஜீவராசிகளும் அவனது பேரருட்கருணையினால் குளிர்வது இயற்கைதானே.

ஆகாயத்தில் பிறந்த காற்றின் துணையுடன் தீ எரிகின்றது. நிலத்தில் விளைந்த நெல் அரிசியாகின்றது. அரிசி நீரில் மூழ்கி, தீயில் வெந்து அன்னமாகின்றது. எனவே அன்னமும் பஞ்ச பூதங்களின் சேர்க்கை. இந்த அன்னம் அபிஷேக நிலையில் ஆண்டவன் மேனி முழுவதும் தழுவி அவனை அகப்ப்டுத்தி அடைக்கலமாகின்றது. அதன் மூலம் ஐம்பூதங்களும் அவனுள் அடக்கமென்பது புலனாகின்றது.எனவே அவனே பரம்பொருள் என்பது தெள்ளத் தெளிவாக தெரிகின்றது. அன்னாபிஷேகம் செய்த சாதத்தை குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் உண்டால் பலன் நிச்சயம் உண்டு என்பது ஐதீகம்.

ஐப்பசி பௌர்ணமியன்று காலையிலே எம்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெறுகின்றது . பின் எம்பெருமானின் திருமேனி முழுவதும் அன்னம் வடித்து சிவலிங்கம் முழுவதும் மறையும் அளவிற்கு சாற்றுகின்றனர். இது அன்னாபிஷேகம் எனப்படுகின்றது. சாயரட்சை பூஜையின்போது அன்னாபிஷேகம் கொண்ட பெருமானுக்கு தீபாராதனையும் சிறப்பு வழிபாடுகளும் நடைபெறுகின்றது. பின் அன்னாபிஷேகராக அருட்காட்சி தருகின்றார் எம்பெருமான். அர்த்தயாம பூசைக்கு முன் அன்னம் கலைக்கப்பட்டு , பூசை நிறைவடைந்தவுடன் பிரசாதமாக பகதர்களுக்கு வழங்கப்படுகின்றது. மீதமான அன்னம் திருக்குளத்திலோ அல்லது கடலிலோ கரைக்கப் படுகின்றது. எம்பெருமானின் அருட்பிரசாதம் நீர்வாழ் உயிரினங்களுக்கும் கிடைக்க வேண்டும் என்பதால் இவ்விதம் செய்யப்படுகின்றது.

அன்னாபிஷேகம் தமிழகத்தின் நெற்களஞ்சியமான தஞ்சை மாவட்டத்திலே உள்ள சில தலங்களில் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றது. அவற்றுள்
தஞ்சை பெருவுடையார் ஆலயம் ,கங்கை கொண்டசோழபுரம் பெருவுடையார் திருக்கோயில் மற்றும் திருச்சோற்றுத்துறை திருக்கோயில் ஆகியவை
குறிப்பிடத்தக்கவை ஆகும்.

தஞ்சை பெருவுடையார் ஆலயம் ,கங்கை கொண்டசோழபுரம் பெருவுடையார் திருக்கோயில் இவ்விரு ஆலயங்களிலும் எம்பெருமானின் லிங்கத் திருமேனி பெயருக்கேற்றார்ப் போல பெரியதாகியதால் ( கங்கை கொண்ட சோழபுரத்தின் லிங்கத்தின் ஆவுடை 43 முழம் நீளம். ) காலையிலேயே அன்னாபிஷேகம் தொடங்குகின்றது புது அறுவடையான அரிசி மூட்டை மூட்டையாக வந்து குவிகின்றது 100 மூட்டை வரை அபிஷேகத்திற்காக தேவைப்படுகின்றது, 

அவ்வரிசியைக் கொண்டு சமைக்கப்பட்ட அத்தனை அன்னமும் பெருமானுக்கு அபிஷேகம் செய்யப்படுகின்றது. அன்னம் கொப்பரை கொப்பரையாக கொண்டுவரப்பட்டு எம்பெருமானின் திருமேனி மேல் சிறிது சிறிதாக அன்னம் சாற்றப்படுகின்றது. எம்பெருமானின் திருமேனி முழுவதும் அன்னாபிஷேகம் முடிந்து பின்னர் பூசைகள் நடைபெறும். அர்த்த சாமத்திற்கு பின் அன்னம் அனைவருக்கும் பிரசாதமாக வழங்கப்படுகின்றது.

பல ஆலயங்களில் அன்னத்தில் எம்பெருமானின் ஒரு முகத்தையோ அல்லது ஐந்து முகங்களையோ அலங்காரம் செய்கின்றனர். சில ஆலயங்களில் அன்னத்துடன் அனைத்து காய்கறிகள் மற்றும் பழங்கள், பட்சணங்கள் ஆகியவற்றையும் படைத்து அலங்காரம் செய்கின்றனர்.

காஞ்சியில் காமாட்சி அம்மன் ஆலயத்தில் 

அன்னபூர்ணே சதாபூர்ணே சங்கர பிராண வல்லபே
ஞான வைராக்கிய சித்யர்த்தம் பிக்ஷாம் தேஹி ச பார்வதி

என்று நாம் வழிபடும் அன்னபூரணிக்கு அன்னாபிஷேகம் நடைபெறுகின்றது, 

சென்னை திருமயிலை முண்டகக்கண்ணி அம்மனுக்கும் சிறப்பாக அன்னாபிஷேகம் நடைபெறுகின்றது.

இந்நாளில் உபவாசம் இருந்து மஹாபிஷேகம் செய்து பின் சிவனுக்கு அன்னாபிஷேகம் செய்த பிரசாதத்தை பக்தியுடன் உண்ணும் போது புண்ணிய பலன்கள் சேர்கின்றன.

வாடாமல் உயிரெனும் பயிர் தழைத்து
ஓங்கிமிக அருள் மழை பொழிந்தும் இன்ப
வாரிதியிலே நின்ன தன் பெனுஞ் சிறகால்
வருந்தாமலே யணைத்து
கோடாமல் வளர் சிற்றெறும்பு முதல்
குஞ்சரக் கூட்ட முதலான சீவ
கோடிகள் தமக்கு புசிக்கும் புசிப்பினை
குறையாமலே கொடுக்கும்

அந்த சிவபெருமானை வருடத்தின் ஒரு நாள் மட்டுமே கிட்டும் அந்த அற்புத அன்னாபிஷேக திருக்கோலத்தில் கண்டு தரிசித்து நன்மையடைவோமாக.

தென்னாடுடைய சிவனே போற்றி!! 
எந்நாட்டவருக்கும் இறைவா போற்றி!!