Monday, February 13, 2017

திருவெண்காட்டில் சங்கடஹர சதுர்த்தி விரத அனுஸ்டானங்கள் ! ! ! 14.02.2017



விநாயகர் துதி

கைத்தல நிறைகனி யப்பமொ டவல்பொரி
கப்பிய கரிமுக ...... னடிபேணிக்

கற்றிடு மடியவர் புத்தியி லுறைபவ
கற்பக மெனவினை ...... கடிதேகும்

மத்தமு மதியமும் வைத்திடு மரன்மகன்
மற்பொரு திரள்புய ...... மதயானை

மத்தள வயிறனை உத்தமி புதல்வனை
மட்டவிழ் மலர்கொடு ...... பணிவேனே

முத்தமி ழடைவினை முற்படு கிரிதனில்
முற்பட எழுதிய ...... முதல்வோனே

முப்புர மெரிசெய்த அச்சிவ னுறைரதம்
அச்சது பொடிசெய்த ...... அதிதீரா

அத்துய ரதுகொடு சுப்பிர மணிபடும்
அப்புன மதனிடை ...... இபமாகி

அக்குற மகளுட னச்சிறு முருகனை
அக்கண மணமருள் ...... பெருமாளே.

சொற்பிரிவு

கைத்தல நிறைகனி அப்ப மொடு அவல் பொரி 
கப்பிய கரிமுகன் அடிபேணி
கற்றிடும் அடியவர் புத்தியில் உறைபவ 
கற்பகம் எனவினை கடிதேகும்
மத்தமும் மதியமும் வைத்திடும் அரன்மகன் 
மற்பொரு திரள்புய மதயானை
மத்தள வயிறனை உத்தமி புதல்வனை மட்டு அவிழ்
மலர்கொ(ண்)டு பணிவேனே
முத்தமிழ் அடைவினை முற்படு கிரிதனில் 
முற்பட எழுதிய முதல்வோனே
முப்புரம் எரி செய்த அச்சிவன் உறை ரதம் 
அச்சு அது பொடிசெய்த அதிதீரா
அத்துயர் அது கொ(ண்)டு சுப்பிரமணி 
படும் அப்புனம் அதனிடை இபமாகி
அக்குற மகளுடன் அச்சிறு முருகனை 
அக்கணம் மணம் அருள் பெருமாளே

பாடல் விளக்கம்:

கரதலத்தில் நிறைந்துள்ள பழம், அப்பம், அவல், பொரி (இவைகளை) வாரி உண்ணும் யானை முகக் கடவுளின் திருவடிகளை விரும்பி, அறிவு நூல்களைக் கற்கும் அடியவர்களுடைய மனதில் நீங்காது வாழ்பவனே, நினைத்தவற்றை அளிக்கும் கற்பக விருட்சமே, என்று உன்னைத் துதி செய்தால் வினைகள் யாவும் விரைவில் ஓடிப் போய்விடும். ஊமத்த மலரும், பிறைச் சந்திரனும் சடையில் தரித்த சிவபெருமானுடைய மகனும், மற்போருக்குத் தக்க திரண்ட தோள்களையுடையவனும், மத யானையை ஒத்தவனும், மத்தளம் போன்ற பெருவயிறு உடையவனும், உத்தமியாகிய பார்வதியின் மகனும் ஆகிய கணபதியைத் தேன் துளிர்க்கும் புது மலர்களைக் கொண்டு நான் வணங்குவேன்.

ஓம் கம் கணபதயே நமஹ...!!

காற்றாகி எங்கும் கலந்தாய் போற்றி!
கயிலை மலையானே போற்றி! போற்றி!

தென்னாடுடைய சிவனே போற்றி…!
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி…! போற்றி…!!

இன்பமே சூழ்க ... ! 
எல்லோரும் வாழ்க . . . !

மேன்மைகொள் சைவநீதி . . . !
விளங்குக உலகமெல்லாம் . . . !

அன்பே சிவம்

திருச்சிற்றம்பலம்'' திருச்சிற்றம்பலம்'' "திருச்சிற்றம்பலம்'