
ஆனி உத்தர திருமஞ்சனத்தையொட்டி மண்டைதீவு திருவெண்காடு ஸ்ரீ சித்தி விநாயகர் தேவஸ்தான பொற்சபை பொன்னம்பலத்தில் வீற்றிருந்து ஆனந்த திருநடனம் புரியும் அருள்மிகு ஸ்ரீ சிவகாமசுந்தரி அம்பாள் உடனுறை அழகிய ஆனந்த நடராஐமூர்த்திக்கு 21.06.2018 அன்று அதிகாலை 4 மணியளவில் சிறப்பு மஹாஅபிஷேகம் (திருமஞ்சனம்) அலங்காரம் தீபாராதனைகள் நடைபெற்று அதனைத் தொடர்ந்து அம்மையும் அப்பனும் திருவீதி உலா வலம் வந்து அடியவர்களுக்கு பூலோக கைலாய தரிசனம் கொடுத்தார்கள்.

மண், நீர், அனல், காற்று, ஆகாயம், மதி, இரவி, எண்ணற்றன வாயுள்ள உயிர்கள் ஆகிய எட்டு மூர்த்தங்களுடன் இம்மை, மறுமை எண்திசை, பெண் ஆண் ஆகியனவாகவும் பெரியதில் பெருமை, சிறியதில் சிறுமை ஆகியனவாகவும் விளங்கும் புகழாளனாகிய அம்பலவாணர் சித்திவிநாயகப்பெருமானும் , ஆனந்தநடராஐமூர்த்தியும் இந்திரன் வழிபடத் திருவெண்காட்டைத் தனது இருப்பிடமாக்கிக் கொண்டு எழுந்தருளியுள்ளார்கள்.

வாக்குண்டாம் நல்ல மனம் உண்டாம் மாமலராள்
நோக்கு உண்டாம் மேனி நுடங்காது-பூக்கொண்டு
துப்பார் திருமேனித் தும்பிக்கையான் பாதம்
தப்பாமல் சார்வார் தமக்கு.





"குனித்த புருவமும் கொவ்வைச் செவ்வாயில் குமிண்சிரிப்பும்
பனித்த சடையும் பவளம் போல் மேனியில் பால் வெண்ணீறும்
இனித்தமுடன் எடுத்த பொற்பாதமும் காணப் பெற்றால்
மனித்தப் பிறவியும் வேண்டுவதே இம்மாநிலத்தே.."
பொருள்:
வளைந்த புருவமும், கோவைப்பழம் போல சிவந்த வாயும் கொண்டவரே! எப்போதும் புன்னகையை தவழ விடுபவரே! கங்கை தாங்கும் சடை பெற்றவரே! பவள மேனி முழுவதும் பால் போன்ற திருநீறு அணிந்தவரே! அழகாகத் தூக்கிய திருவடியைக் கொண்டவரே! உம்மைத் தரிசிப்பது ஒன்றே, நான் இந்த பூமியில் மனிதப்பிறவி எடுத்ததன் பயனாகும்.









ஆனி உத்தர திருமஞ்சனத்தையொட்டி அருள்மிகு ஸ்ரீ சிவகாம சுந்தரி அம்பாள் உடனுறை அழகிய ஆனந்த நடராஐமூர்த்தி திருவீதி உலா வலம் வந்து அடியவர்களுக்கு பூலோக கைலாய தரிசனம் கொடுத்தார்கள்.



