Monday, December 17, 2018

யாழ்ப்பாணம் மண்டைதீவு திருவெண்காடு புண்ணிய நாம சேஷத்திரத்தில் முத்தி தரும் வைகுண்ட ஏகாதசி சொர்க்க வாசல் திறப்பு ! ! ! 18.12.2018


வைகுண்ட ஏகாதசி (18.12.2018) நாளில், அதன் பெருமையையும் சாந்நித்தியத்தையும் உணர்ந்து பெருமாளை ஸேவிப்போம். சகல செளபாக்கியங்களையும் பெறுவோம்!
தேவர்கள் முதலான அனைவரையும் துன்புறுத்தி வந்தான் அசுரன் முரன். அசுரனிடமிருந்து தங்களை காக்குமாறு ஈசனை சரணடைந்தனர் தேவர்கள். ஈசனோ, தேவர்களை மகாவிஷ்ணுவிடம் முறையிடச் சொன்னார்.

விஷ்ணுவை சரணடைந்த தேவர்களுக்காக சுமார் 1000 வருடங்கள் கடுமையாக அசுரனுடன் போர் புரிந்தார் மகாவிஷ்ணு.அதன் பிறகு மிகவும் களைப்படைந்த மகாவிஷ்ணு பத்ரிகாஸ்ரமத்தில் உள்ள ஒரு குகையில் படுத்து ஓய்வெடுத்தார்.அந்த நேரத்தை தனக்கு சாதகமாக்கி கொண்ட அசுரன், பகவானை கொல்லத் துணிந்த போது, அவருடைய திவ்ய சரீரத்தில் இருந்து அவருடைய சக்தி ஒரு பெண் வடிவில் வெளிப்பட்டு,  அசுரனை எரித்து சாம்பலாக்கியது.
மகாவிஷ்ணு விழித்தெழுந்து நடந்ததை  அறிந்து, அந்த சக்திக்கு ஏகாதசி எனப் பெயரிட்டார். உன்னை விரதம் இருந்து போற்றுவோருக்கு நான் சகல நன்மைகளையும் தருவேன் என வரமளித்தார். தன்னுள் மீண்டும் சக்தியை ஏற்றுக்கொண்டார். எனவே ஏகாதசி எனும் சக்தி விழிப்புடன் இருந்து ஸ்ரீநாராயணனின் அருளும் வரமும் பெற்ற ஏகாதசி நாளில் நாமும் கண்விழித்து விரதம் கடைபிடித்தால் அவரின் அருள் பரிபூரணமாக கிடைக்கப்பெற்று இனிதே வாழ்வோம் என்பது ஐதீகம்.
மாதந்தோறும் ஏகாதசி உண்டு என்றாலும் மார்கழி மாத சுக்ல பட்சத்தில் வரும்  ஏகாதசியே  வைகுண்ட ஏகாதசி. இந்த நாளில் வைணவக்  கோயில்களில்  சொர்க்க வாசல் திறக்கப்படும். பெருமாள், பரமபத வாசல் சந்நிதியில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்புரிவார்.
பெருமாள் கோயில்களில் வைகுண்ட ஏகாதசி விழா, பகல் பத்து, இராப்பத்து உற்ஸவமாக  சிறப்பாக நடைபெறும். இராப்பத்தின் முதல் நாள் பரமபத வாசல் சந்நிதி திறப்பு விழா நடைபெறும். கலியுகத்தில் நம்மாழ்வாருக்கு முன்பு வைகுண்டத்திற்கு சென்றோர் யாரும் இல்லாததால் வைகுண்டத்தின் வாசல் மூடப்பட்டு இருந்தது.
 நம்மாழ்வார் முக்தி அடைந்த அன்று, அது திறக்கப்பட்டது. இதனை அறிந்த நம்மாழ்வார், பெருமாளிடம் ‘எனக்கு மட்டும் வைகுண்ட வாசலைத் திறந்தால் போதாது. என்னைத் தொடர்ந்து தங்கள் மீது பக்தி செலுத்தும் எல்லா பக்தர்களுக்காகவும் வைகுண்டவாசல் திறக்கப்பட வேண்டும்’ என்று வேண்டினார்.  பெருமாள், நம்மாழ்வாரின் வேண்டுகோளை ஏற்று மார்கழி மாத சுக்லபட்ச ஏகாதசியில் சொர்க்க வாசல் திறக்க வழி செய்தார். அந்த நாள்தான் வைகுண்ட ஏகாதசியாக, சொர்க்க வாசல் திறப்பு நிகழ்ச்சியாக அனுசரிக்கப்படுகிறது.
திருமால் வழிபாடு செய்து, குறைவற்ற வாழ்வை வாழ்வோம்.
சுபம்

ஓம் கம் கணபதயே நமஹ...!!

இன்பமே சூழ்க ... ! 
எல்லோரும் வாழ்க . . . !

மேன்மைகொள் சைவநீதி . . . !
விளங்குக உலகமெல்லாம் . . . !

அன்பே சிவம்

திருச்சிற்றம்பலம்'' திருச்சிற்றம்பலம்'' "திருச்சிற்றம்பலம்