Wednesday, May 21, 2014

திருவெண்காட்டில் தேய்பிறை அஷ்டமி ! ! ! (21.05.2014)


12 ராசிகளையும் தன் உடலில் அங்கங்களாகக் கொண்டவர் ஸ்ரீபைரவர். நவக்கிரகங்களுக்கும் பிராண தேவதையாக இருப்பவரும் பைரவரே.


தேவ, அசுர, மானிடர்களும் அஞ்சும் கிரகம் சனி பகவான் ஆவார். சனிக்கு வரம் தந்து, இக்கடமையைச் செய்ய வைத்த சனியின் குரு ஸ்ரீபைரவரே ஆவார். சனியின் வாத நோயை நீக்கியவரும் பைரவரே.

தன் தமையன் எமன், பைரவரிடம் அதீத சக்திக்கு வரம் பெற்றதைக் கண்ட அவன் தம்பி சனீஸ்வரன்,பைரவரை நோக்கி கடுமையான தவம் இருந்தான்.தவ வலிமையால் பைரவர் அவன் முன் தோன்றி, மும்மூர்த்திகள் உள்பட அனைவரையும்,கால வர்த்தமான நிர்ணயப்படி(ஜோதிட ரீதியாக சனிப்பெயர்ச்சிப்படி) நல்லது தீயது செய்யும் சக்தி அருளினார். அப்போது சனீஸ்வரனிடம் ஒரு சத்தியப்பிரமாணம் பெற்றுக்கொண்டார்.


சனீஸ்வரனின் சஞ்சாரத்தால் எவர் ஒருவருக்கு கஷ்டம் கொடுக்க வேண்டியிருந்தாலும்,அவர்கள் பைரவரை வழிபட்டு சரணடைந்தால் அவரகளுக்கு சனீஸ்வரன் நன்மையையே செய்ய வேண்டும் என பைரவபெருமானிடம் விரும்பினார்.

அதனால்தான் ,ஏழரை நாட்டுச்சனி,அஷ்டமச்சனி,ஜன்மச்சனியால் அவதிப்படுவோர் பைரவ வழிபாடு பண்ணுவதன் மூலம் அத்தொல்லைகளிலிருந்து விடுபட முடியும். 


பைரவருக்கு பஞ்சதீபம் ஏற்றி வழிபடுவது சிறப்பு தருவதாக கூறப்படுகிறது. பவுர்ணமிக்கு பின்வரும் தேய்பிறை அஷ்டமி தினத்தில், பைரவருக்கு பஞ்ச தீபம் ஏற்றி வழிபாடு செய்தால், தீராத தொல்லைகள் எதுவாக இருந்தாலும் தீர்ந்து வாழ்வில் மகிழ்ச்சியை ஏற்படுத்தும் என்பதில் எள்ளளவும் ஐயம் இல்லை. 

நல்லெண்ணெய், விளக்கெண்ணெய், இலுப்பை எண்ணெய், தேங்காய் எண்ணெய், பசு நெய் ஆகியவற்றை தனித்தனி அகல் விளக்கில் ஊற்றி, தீபம் ஏற்ற வேண்டும். ஒரு தீபத்தில் இருந்து மற்றொரு தீபத்தை ஏற்றாமல் ஒவ்வொரு தீபத்தையும் தனித்தனியாக ஏற்றி வழிபாடு செய்து வந்தால் எண்ணிய காரியங்கள் எளிதில் நிறைவேறுவதுடன், பைரவரின் பரிபூரணஅருளும் கிட்டும்.