Monday, November 10, 2014

திருவெண்காட்டில் சங்கடங்கள் தீர்க்கும் சங்கடஹர சதுர்த்தி விரத அனுஸ்டானம் 10.11.2014 சங்கடஹர சதுர்த்தி உருவான வரலாறு ! ! !


http://www.thiruvenkadumandaitivu.com/2014/11/10112014.html

பரத்வாஜ மகரிஷி ஒரு சமயம் நர்மதை நதிக்கரையில் தவம் செய்து கொண்டிருந்தபோது மங்கை ஒருத்தியைப் பார்த்து மனம் மயங்கினார். மோகித்த அவர் அவளை அவந்தி நகருக்கு அழைத்துச் சென்று இல்லறம் நடத்தினார். அவர்களுக்கு ஆண் குழந்தை ஒன்று பிறந்தது. அந்த மங்கையோ தேவலோகத்துக்குத் திரும்பிச் சென்றாள். பரத்வாஜ மகரிஷியும் அவந்தி நகரிலேயே குழந்தையை விட்டு விட்டு நர்மதை நதிக் கரைக்கு சென்று பாதியில் விட்ட தவத்தை மீண்டும் தொடர்ந்தார். அந்த ஆண் குழந்தையை பூமாதேவி அரவணைத்து அங்காரகன் என்று பெயர் சூட்டினாள். ஒரு சமயம் அங்காரன் பூமாதேவியிடம், அம்மா என் தந்தை பார்க்க ஆவலாக இருக்கிறேன் என்று கேட்டான்.

உடனே மகரிஷியைச் சந்தித்து இவனே உன் மகன் உங்களைச் சந்திக்க விரும்பியதால் இங்கு அழைத்து வந்தேன், ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று வேண்டினாள். மகரிஷி தன் மகனை அணைத்துக் கொண்டார். அங்காரகன் உரிய வயதை அடைந்ததும் முறைப்படி அவனுக்கு உபநயனம் முதலிய சடங்குகளைச் செய்து வைத்து வேத அத்யனத்தையும் துவக்கி வைத்தார். ஒருநாள் தன் தந்தையிடம் அங்காரகன் தான் சர்வ கலைகளிலும் வல்லமை பெற விரும்புவதாகவும் அதற்கேற்ற வழியைக் காட்டும்படியும் வேண்டினான். 



  திருவெண்காடு திவ்வியநாம சேஷ்திரத்தில் மூலமூர்த்தியாக வீற்றிருந்து திருவருள் பாலித்துக்கொண்டிருக்கும் ஸ்ரீ அம்பலவாணர் சித்தி விக்கினேஸ்வரப்பிள்ளையார். 

ஸ்ரீ சித்திவிநாயகரைக் குறித்து தவம் செய் என்று கூறி உரிய மந்திரங்களையும் உபதேசித்து அனுப்பி வைத்தார். பல நூறு வருடங்கள் கடுமையாக தவம் செய்த அவனுக்குப் பலன் கிடைக்கும் காலம் கனிந்தது. மாசி மாதம் கிருஷ்ண பட்சம் சதுர்த்தியன்று இரவு சந்திரோதய காலத்தில் அங்காரனுக்கு தரிசனம் தந்தார் சித்திவிநாயகர். விக்னேஸ்வரா தங்களிடம் நான் சில வரங்களை பெற விரும்புகிறேன், அருள் புரியுங்கள் என்று வேண்டினான். அங்காரகனே விரும்பும் வரம் எதுவாக இருந்தாலும் தயங்காமல் கேள் என்று சித்திவிநாயகர் திருவாய் மலர்ந்தருளினார்.

நான் அமிர்தம் அருந்தி அமரனாக ஆசைப்படுகிறேன். சர்வ மங்களமான உருவத்தோடு தங்களை தரிசித்த என்னை அனைவரும் மங்களன் என்று அழைக்க வேண்டும். இந்த சதுர்த்தி நன்னாளை அனைவரும் கொண்டாட வேண்டும். இந் நாளில் தங்களை வணங்கி வழிபடும் பக்தர்களின் துயரங்களை நீக்கி அருள வேண்டும். மேலும் என்னை வணங்கும் அடியவர்களுக்கு செல்வம் அளிக்கும் கிரகமாக நான் மிளர வேண்டும் என்ற பல வரங்களை வேண்டினான்.


 ஸ்ரீ சித்திவிநாயகப் பெருமான்

சித்திவிநாயக அன்பனே! நீ கேட்ட எல்லா வரங்களையும் தருகிறேன். இந்த சதுர்த்தி நாள் சங்கடஹர சதுர்த்தியாகவும் போற்றப்படும். இந்த நாளில் என்னை வழிபடுபவர்களுக்கு சங்கடங்களை அடியோடு விலக்கி விடுவேன் என்று அருளி மறைந்தார். பிறகு சித்திவிநாயகரின் பேரருளால் தேவலோகம் அடைந்த அங்காரகன், தேவாமிர்தம் பருகியதுடன் நவகிரகங்களில் ஒருவனாகும் பேறு பெற்றான். எனவே செவ்வாய்க்கிழமையுடன் சேர்ந்து வரும் சதுர்த்தி, மற்ற சதுர்த்திகளைக் காட்டிலும் ஒப்பற்றது.


ஓம் கம் கணபதயே நமஹ...!!

தென்னாடுடைய சிவனே போற்றி…!
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி…! போற்றி…!!
மேன்மைகொள் சைவநீதி . . . !
விளங்குக உலகமெல்லாம் . . . !
இன்பமே சூழ்க . . . !
எல்லோரும் வாழ்க . . . ! 

 திருச்சிற்றம்பலம்'' திருச்சிற்றம்பலம்'' "திருச்சிற்றம்பலம்''