Saturday, February 7, 2015

திருவெண்காட்டில் சகல யோகமும் தரவல்ல சங்கடகர சதுர்த்தி ! ! ! 07. 02 . 2015



பிள்ளையாரை வழிபட சங்கடகர சதுர்த்தி நாள் மிகவும் ஏற்றது. பவுர்ணமியை அடுத்த நான்காம் நாள் தேய்பிறையில் வரும் சதுர்த்தி நாளையே ‘சங்கடஹர சதுர்த்தி’ என்பர். சங்கடங்களை அழிப்பதால் இது சங்கடஹர சதுர்த்தி எனப்படுகிறது. 

கைத்தல நிறைகனி அப்பமொ டவல்பொரி
கப்பிய கரிமுகன் ...... அடிபேணிக்
கற்றிடும் அடியவர் புத்தியில் உறைபவ
கற்பகம் எனவினை ...... கடிதேகும்
மத்தமு மதியமும் வைத்திடும் அரன்மகன்
மற்பொரு திரள்புய ...... மதயானை
மத்தள வயிறனை உத்தமி புதல்வனை
மட்டவிழ் மலர்கொடு ...... பணிவேனே
முத்தமிழ் அடைவினை முற்படு கிரிதனில்
முற்பட எழுதிய ...... முதல்வோனே
முப்புரம் எரிசெய்த அச்சிவன் உறைரதம்
அச்சது பொடிசெய்த ...... அதிதீரா
அத்துய ரதுகொடு சுப்பிர மணிபடும்
அப்புன மதனிடை ...... இபமாகி
அக்குற மகளுடன் அச்சிறு முருகனை
அக்கண மணமருள் ...... பெருமாளே.

பாடல் தொகுப்பு: திருப்புகழ்
இயற்றியவர்: ஓசைமுனி அருணகிரிநாதப் பெருமான்

விநாயகர் சதுர்த்தி தினத்தன்று விநாயகரை வாழ்த்தியும், இசைப்பாடியும் வழிப்பட்டும் வந்தார்கள் தேவலோகத்தினரும், பூலோக மக்களும். இப்படி எங்கும் தனக்கு வழிபாடு நடப்பதை கண்ட விநாயகர், ஆனந்தத்தில் தன் மனமகிழ்ச்சியை நடனமாக வெளிப்படுத்தினார். பெருத்த உடலுடன் அவர் நடனமாடியதை கண்ட சந்திரன், கேலியாக சிரித்து விடுகிறார். அதோடு இருக்காமல், கிண்டலாக விநாயகரை போல நடனமாடி காண்பித்தார். அவ்வளவுதான் வினை தீர்ப்பவனாலேயே வந்தது வினை. சந்திரனை சபித்து விடுகிறார் விநாயகர். 


திருவெண்காடு ஸ்ரீ சித்திவிநாயகர் தேவஸ்தானம்
 மண்டைதீவு - இலங்கை


திருவெண்காடு திவ்வியநாம சேஷ்திரத்தில் மூலமூர்த்தியாக வீற்றிருந்து திருவருள் பாலித்துக்கொண்டிருக்கும் ஸ்ரீ அம்பலவாணர் சித்தி விக்கினேஸ்வரப்பிள்ளையார். 

இதனால் மனம் வருந்திய சந்திரன், தன் சாபத்துக்கு விநாயகரிடமே மன்னிப்பு கேட்டு நிவர்த்தி பெற, விநாயகப் பெருமானை நினைத்து கடும் தவம் இருந்தார். சந்திரனின் தவத்தை ஏற்ற விநாயகர், அவரை மன்னித்து, சந்திரனை தன் நெற்றியில், வட்ட நிலா பொட்டாக அணிந்து கொண்டு, “ஸ்ரீபாலச்சந்திர விநாயகர்” என்ற சிறப்பு பெயரை பெற்றார்.


ஆனால் சந்திரனை கேலி செய்த தவறுக்காக, மீண்டும் அதுபோல ஒரு தவறை யாரும் செய்ய கூடாது என்பதற்கு பாடமாக இருக்க சந்திரனுக்கு ஒரு தோஷத்தை தண்டனையாக தந்தார். ஒவ்வோரு ஆண்டும் விநாயகர் சதுர்த்தியன்று சந்திரனை பார்த்துவிட்டால் அன்றைய நாள் முழுவதும் விக்னேஸ்வரனுக்கு செய்த பூஜையும் பெற்ற புண்ணியமும் பலன் இல்லாமல் போய்விடும். அதனால் தெரியாமல் நாம் விநாயகர் சதுர்த்தி அன்று சந்திரனை பார்த்துவிட்டால், அதற்கு பரிகார நிவர்த்தியாக சங்கடகர சதுர்த்தி அன்று விநாயகப் பெருமானுக்கு அறுகம்புல் தந்து வணங்கினால், தோஷம் நிவர்த்தியாகும்.




விநாயகர் சதுர்த்தி அன்று சந்திரனை பார்த்ததால் வந்த அவதி



சத்திராஜித். சூரியனை நினைத்து கடும் தவம் செய்து சக்தி வாய்ந்த ஸ்யமந்தக மணியை பெற்றார். “அந்த மணியில் அப்படி என்னத்தான் இருக்கிறது?“ என்று கிருஷ்ணபரமாத்மாவிடம் கேட்டார் ஒருவர். “மிகவும் சக்தி வாய்ந்தது ஸ்யமந்தக மணி.” என்று கிருஷ்ணபகவான், ஸ்யமந்தக மணியை பற்றி விளக்கமாக கூறினார். சில நாட்களிலேயே ஸ்யமந்தகமணி காணாமல் போனது. “அந்த மணியின் சக்தி கிருஷ்ணருக்கு மட்டும்தான் தெரியும். அதனால் அந்த மணியை கிருஷ்ணர்தான் திருடியிருப்பார்.” என்று சத்திராஜித், ஊர்மக்களிடம் கூறினார்.


பொது மக்களும், “சாதாரண வெண்ணையை கூட திருடியவன் கண்ணன். நிச்சயம் அவரே விலைமதிக்க முடியாத ஸ்யமந்தக மணியை திருடியிருப்பார்.” என்று கிருஷ்ணரை கள்வன் என்று பழித்தார்கள். “தாம் திருடவில்லை.” என்பதை நிருபிப்பதற்காக கடுமையாக முயற்சித்து, அந்த ஸ்யமந்தக மணியை கண்டுபிடித்து சத்திராஜித்திடம் கொடுத்து, அந்த மணி எப்படி தொலைந்தது, அது எங்கிருந்தது என்பதை ஆதாரபூர்வமாக விளக்கி நிருபித்தார் கிருஷ்ணபரமாத்மா.

“ஒரு நல்லவனை கள்வன் என கூறி விட்டோமே.” என்று மனம் வருந்திய சத்திராஜித், தன் மகள் சத்தியபாமாவை கிருஷ்ணருக்கு திருமணம் செய்து கொடுத்தார். கிருஷ்ணருக்கு கள்வன் என பழி உண்டானதற்கு காரணம், ஸ்ரீகிருஷ்ணர், விநாயகர் சதுர்த்தி அன்று சந்திரனை பார்த்ததால்தான் என்கிறது விநாயகர் புராணம்.


சங்கடஹர சதுர்த்தி நாளில் அதிகாலையில் நீராடி, விரதமிருந்து பிள்ளையாரை வழிபட நல்ல பலன் கிட்டும் என்பது ஐதீகம். சங்கடஹர சதுர்த்தி அன்று மாலை வரை உணவு அருந்தாமல் விரதம் இருக்க வேண்டும். 

முடியாதவர்கள் நீர் ஆகாரம் மட்டும் அருந்தி விரதமிருக்கலாம். மாலையில் அருகில் உள்ள விநாயகர் கோவிலுக்கு சென்று நெய் விளக்கு ஏற்றி அங்கு நடக்கும் பூஜையில் கலந்து கொண்டு விரதத்தை நிறைவு செய்ய வேண்டும்.

ஓம் கம் கணபதயே நமஹ...!!

தென்னாடுடைய சிவனே போற்றி…!
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி…! போற்றி…!!
மேன்மைகொள் சைவநீதி . . . !
விளங்குக உலகமெல்லாம் . . . !
இன்பமே சூழ்க . . . !
எல்லோரும் வாழ்க . . . ! 


 "திருச்சிற்றம்பலம்" '' திருச்சிற்றம்பலம்'' "திருச்சிற்றம்பலம்'