Saturday, May 2, 2015

திருவெண்காட்டில் சித்திரா பௌர்ணமி விரத அனுஸ்டானங்கள் ! 03.05.2015


மாதம் தோறும் தான் பௌர்ணமி வருகிறது. சித்திரைமாதப் பௌர்ணமியில் அப்படியென்ன சிறப்பு? சித்திரைமாதம் சித்திரை நட்சத்திரம்கூடி வரும் பௌர்ணமி நாள் சித்திரா பௌர்ணமி நாளாகும்.

இது வசந்தகாலம். காலங்களில் நான் வசந்தகாலமாக இருக்கிறேன் என்று கண்ணன் பகவத்கீதையில் கூறுகிறார். இவ்வசந்த காலத்தில் தான் பெரும்பாலும் ஆலயங்களில் பிரம்மோற்சவம் (திருவிழா) நடைபெறுகிறது. அடுத்தடுத்து தானதர்மங்கள் செய்ய அக்ஷய திருதியை, சித்திரா பௌர்ணமி என்று எவ்வளவு புண்ணிய நாட்கள்!

வானமண்டலத்தில் சூரியனுக்கும், சந்திரனுக்கும் இடைப்பட்ட தூரத்தை "திதி' என்கிறோம். அமாவாசையன்று சூரியனும் சந்திரனும் இணையும் நாளில் மூதாதையர்களுக்கு "திதி' கொடுப்பதும், (அன்று சூரிய சந்திரர்கள் ஒரே டிகிரியில் இணைந்திருப்பார்கள்.) பௌர்ணமியன்று சிறப்பான பூஜைகள், வழிபாடுகள் செய்வதும் சிறந்தது. (அன்று சூரிய சந்திரர்கள் சம சப்தமமாக இருப்பார்கள்.) 

திருவெண்காடு சித்திவிநாயகர் தேவஸ்தானம் மண்டைதீவு - இலங்கை


"திருவெண்காடு திவ்வியநாம சேஷ்திரத்தில் மூலமூர்த்தியாக வீற்றிருந்து திருவருள் பாலித்துக்கொண்டிருக்கும் ஸ்ரீ அம்பலவாணர் சித்தி விக்கினேஸ்வரப்பிள்ளையார்." 

அமாவாசையில் சூரியனுடன் 0 டிகிரியில் இணைந்த சந்திரன், தினமும் 12 டிகிரி நகர்ந்து 15ம் நாளான பௌர்ணமி அன்று 180ம் டிகிரியை அடைகிறது; சூரியனுக்கு சம சப்தமமாகி முழுமையான ஆகர்ஷண சக்தியை (புவியீர்ப்பு) வெளிப்படுத்துகிறது. அதனால் அன்று செய்யும் பூஜைகள், வழிபாடுகள் சிறப்பைப் பெறுகின்றன. 

சிவசக்தி ஐக்கியம்:                                                                   

சூரியனை பித்ருகாரகன் (தந்தையை நிர்ணயிப்பவர்) என்றும், சந்திரனை மாத்ருகாரகன் (தாயை நிர்ணயிப்பவர்) என்றும் கூறுவர். அதாவது அமாவாசையன்று சூரியனும், சந்திரனும் இணையும் நாளில் மூதாதையர்களுக்கு திதி, தர்ப்பணம் செய்கிறோம். சூரியனுக்கு 

அதிதேவதையாக பரமசிவனையும், சந்திரனுக்கு அதிதேவதையாக பார்வதியையும் வைத்திருப்பதும் ஆராய்ச்சிக்கு உகந்தது. அமாவாசை, பௌர்ணமி அன்று முறையே சூரிய சந்திர சங்கமத்தையும், சமசப்தமமாக இருப்பதையும் சிவசக்தியின் ஐக்கியம் என்று கூறுவது மிகையாகாது. 


மனித மனத்தின் மீது அமாவாசை, பௌர்ணமி திதிகளின் தாக்கம்:      

அமாவாசை, பௌர்ணமி அன்று நிகழும் ஆகர்ஷண சக்தியின் வேறுபாடுகள் மனித மன இயல்புகளில் பெரும் மாறுதல்களை உண்டாக்குகின்றன என்பதை மருத்துவம் ஏற்றுக் கொள்கிறது. இந்தக் காலங்களில் மன நோயாளிகளின் நடத்தையில் மாற்றங்கள் உண்டாகின்றன. மேலும் ஜாதகத்தில் சூரிய சந்திரர்கள் பாதிக்கப்பட்டிருப்பவர்களுக்கு சித்தப்பிரமை, மனஅழுத்தம், ஹிஸ்டீரியா போன்றவைகள் உண்டாவதையும் அனுபவ ரீதியாகக் காண்கிறோம். 

இதற்கு ஜோதிடத்தின் மூலமாக காரணங்களைத் தேடுங்கால், சூரியனை ஆத்மகாரகன் என்றும், சந்திரனை மனோகாரகன் என்றும் நமது புராதன நூல்கள் குறிப்பிடுவதன் மகத்துவம் புரிகிறது. நமது ஆத்ம பலம் பெருகினால்தான் நம்மால் இந்த உலகில் சிறப்புடன் வாழ முடியும். கடவுளைத் தேடும் ஆற்றலும் உண்டாகும். அதாவது ஆன்மீகத்தின் மூலமாக ஆத்மபலத்தைப் பெற, இத்தகைய ஜாதக அமைப்பு உதவுகிறது. ப்ராணாயாமம், யோகா போன்றவற்றிற்கு சூரிய பகவானின் அனுக்கிரகம் அவசியம் தேவை. ஆத்மபலம் மேம்பட, மனதின் சக்தி அவசியம். "மனம் வசப்பட உன்னை உணர்வாய்' என்பது பெரியோர் வாக்கு. அப்படிப்பட்டமனதை நிர்ணயிப்பவர் சந்திர பகவான். அதனால்தான் சூரிய சந்திரர்களின் பலத்தைப் பெருக்கிக் கொள்வதால், வசிய சக்திகளைப் பெறும் ஆற்றல் உண்டாகிறது. 


பௌர்ணமியின் சிறப்பு:                                                        

பௌர்ணமிகளில் சித்திரா பௌர்ணமி தினத்தன்று மாதத்தின் பெயரும், நட்சத்திரத்தின் பெயரும் ஒன்றாகி, சித்திரை மாதத்தில் சூரியன் உச்ச பலம் பெறுகிறார். சந்திரன் சித்திரை நட்சத்திரத்தில் சஞ்சரிக்கிறார். கார்த்திகை மாத பௌர்ணமி தினத்தன்று சூரியன் கார்த்திகை மாதத்திலும், சந்திரன் கார்த்திகை நட்சத்திரத்திலும் சஞ்சரிப்பார். அன்று சந்திரன் உச்ச பலம் பெறுவார். மற்றும் சில பௌர்ணமிகளுக்கு சிறப்புகள் உள்ளன. வைகாசி மாதம் வரும் பௌர்ணமி, விசாக நட்சத்திரத்தில் வரும். 

அன்று முருகக் கடவுள் அவதரித்த தினமாகும். மார்கழி மாதத்தில் வரும் பௌர்ணமி, திருவாதிரை நட்சத்திரத்தில் வரும். அது பரமசிவனின் திரு நட்சத்திரமாகி, ஆருத்ரா தரிசனம் காண பாபங்கள் தொலைந்துவிடும். அன்று ஆனந்த நடனமாடுகிறார் நடராஜப் பெருமான். அபஸ்மாரம் என்னும் முயலகனை தனது திருவடிகளால் மிதித்துக் கொண்டிருக்கும் ஸ்ரீநடராஜரை வழிபட்டால், அபஸ்மாரம் என்னும் காக்காய் வலிப்பு நோய் குணமாகும் என்பதும் ஓர் "சிதம்பர ரகசியம்.' 

தை மாதத்தில் பௌர்ணமி, பூசம் நட்சத்திரத்தில் வரும். அன்று செய்யும் முருக வழிபாட்டிற்கு ஈடு இணை இல்லை. மாசி மாதப் பௌர்ணமி, மக நட்சத்திரத்தில் வரும். அன்று அம்பிகையை வழிபட, தேவியின் பூரண அருள் கிட்டும். பங்குனி மாதத்துப் பௌர்ணமி, உத்திர நட்சத்திரத்தில் வரும். அன்று திருச்செந்தூரில் ஐராவத மண்டபத்தில் 108 சிவலிங்கங்கள் சாட்சியாக ஸ்ரீவள்ளி-ஸ்ரீமுருகர் திருமணம் நடப்பதைப் பார்த்தவர்கள் மறுபிறவி எய்தார் என்பது உண்மை. 


மேலும் பஞ்சகோசங்களில் பரமேஸ்வரனுக்கு ப்ராணமய கோசமும், பராசக்திக்கு மனோமய கோசமும் கொடுக்கப்பட்டுள்ளதை ஆராய்ச்சி செய்து பார்க்கையில் நம் வாழ்க்கையில் சூரிய சந்திரர்களின் தாக்கம், இந்தப் பார்வதி-பரமேஸ்வர வழிபாட்டினாலும், "நமசிவாய' என்னும் திருநாம ஜபத்தினாலும், லலிதா சஹஸ்ரநாம பாராயணத்தினாலும் பெருமளவு நலம் சேர்க்கும் என்பதில் இரண்டாவது கருத்துக்கு இடமில்லை என்று உறுதியாகக் கூறலாம். 

அக்ஷய திருதியை போலவே இந்த நாளிலும் தானங்கள் செய்வது நன்மை தரும் என்று கருதப்படுகிறது. 

வெய்யிலுக்கு இதமாக தயிர்சாதம், கைவிசிறி, பானகம், நீர்மோர் இவற்றை அந்தணர்களுக்குத் தானமாக அளிப்பது வழக்கம். 

உப்பில்லாமல் உணவருந்தி, பசும்பால், பசு நெய், பசுந்தயிர் தவிர்த்து சித்திரா பௌர்ணமி விரதம் இருந்து ஒரு மூங்கிலாலான முறத்தில் அரிசி, வெல்லம், மாங்காய், ஒரு நோட்டுப்புத்தகம், பேனா முதலியவையும் தானம் செய்யலாம். 

அது என்ன புத்தகம், பேனா? புதிதாக இருக்கிறதா? ஆம்! எமனின் சபையில் நம் பாவ புண்ணியக்கணக்கை இம்மியும் பிசகாமல் எழுதும் சித்திரகுப்தன் பிறந்த நாளாகவும் இது கருதப்படுவதால் நம் கணக்கை நல்ல முறையில் அவர் எழுத இந்த தானம் கொடுக்கப்படுகிறது என்கிறார்கள். சில கோவில்களில் சித்திரகுப்த பூஜையும் செய்யப்படுகிறது. 


இனி கோவில்களில் சித்திரா பௌர்ணமியை ஒட்டி என்னென்ன சிறப்பு வழிபாடுகள் நடக்கின்றன என்று பார்ப்போம். குறிப்பாக அம்மன் கோவில்களில் பால்குடங்கள் எடுப்பது, திருவிளக்கு பூஜை என்றும், சிவாலயங்களிலும் பெருமாள் கோவில்களிலும் சிறப்பு அபிஷேகங்கள், இறைவன் வழிபாடு, வீதி ஊர்வலம் என்றும் சிறப்பாக நடைபெறுகின்றன.

ஆண்டாண்டுகளாக நடந்துவரும் இதுபோன்ற திருவிழாக்களும், சிறப்பு ஆராதனைகளும் மக்களின் ஆன்மீக உணர்வுகளை வளர்க்க உதவுகின்றன என்பதில் ஐயமில்லை.


               "மேன்கொள் சைவநீதி விளங்குக உலகமெல்லாம்"      

ஓம் கம் கணபதயே நமஹ...!!

தென்னாடுடைய சிவனே போற்றி…!
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி…! போற்றி…!!
மேன்மைகொள் சைவநீதி . . . !
விளங்குக உலகமெல்லாம் . . . !
இன்பமே சூழ்க . . . !
எல்லோரும் வாழ்க . . . ! 


 "திருச்சிற்றம்பலம்" '' திருச்சிற்றம்பலம்'' "திருச்சிற்றம்பலம்'