Wednesday, April 22, 2015

திருவெண்காட்டில் செல்வச் செழிப்பு தரும் சதுர்த்தி விரத அனுஸ்டானங்கள் ! ! ! (22.04.2015)



சதுர்த்தியில் விரதமிருந்து ஆனை முகனை முறையாக வழிபட்டால், வேண்டிய வரத்தையும் காரிய அனுகூலத் தையும் அவர் பெருமையுடன் நமக்கு அளிப்பார். எந்த வொரு காரியத்தை தொடங்கினாலும், விநாயகரை வழிபட்டுத் தான் நாம் தொடங்குவது வழக்கம். 
கணங்களுக்கு எல்லாம் அதிபதியாவதால் அவரை ‘கணபதி’ என்று சொல்கின்றோம். எனவே, நாம் ‘தேவ’ கணத்தில் பிறந்தவராக இருந்தாலும், ‘மனித’ கணத்தில் பிறந்தவராக இருந்தாலும், ‘அசுர’ கணத்தில் பிறந்தவராக இருந்தாலும், அனைவரும் வணங்க வேண்டிய தெய்வமாக விளங்குபவர் ஆனைமுகப் பெருமானாகும். மஞ்சள் பொடியிலும் காட்சி தருவார். சாணத்திலும் காட்சி கொடுப்பார். வீட்டிலும் வழிபாடு செய்யலாம். 

திருவெண்காடு சித்திவிநாயகர் தேவஸ்தானம் மண்டைதீவு - இலங்கை

"திருவெண்காடு திவ்வியநாம சேஷ்திரத்தில் மூலமூர்த்தியாக வீற்றிருந்து திருவருள் பாலித்துக்கொண்டிருக்கும் ஸ்ரீ அம்பலவாணர் சித்தி விக்கினேஸ்வரப்பிள்ளையார்." 

விக்ரகம் வைத்திருக்கும் ஆலயத்திற்கும் சென்றும் வழிபாடு செய்யலாம். தும்பிக்கை வைத்திருக்கும் அந்த தெய்வத்தை முழு நம்பிக்கையோடு நாம் வழிபட்டால், இன்பங்கள் அனைத்தும் இல்லம் வந்து சேரும். துன்பங்கள் தூர விலகி ஓடும். ‘சதுரம்’ என்றால் நான்கு பக்கங்களும் பூர்த்தியாகிய அமைப்பாகும். எனவே, வாழ்க்கைத் தேவைகள் பூர்த்தியாக, நாம் சதுர்த்தி விரதம் மேற்கொள்ள வேண்டும். 

சதுர்த்தி நாளில் அதிகாலையில் எழுந்து காலைக் கடன்களாகிய உள்ளத்தையும் உடலையும் சுத்தம் செய்த பின்பு விநாயகரை மனம் உருகப் பிரார்த்தனை செய்ய வேண்டும். சூரியன் உதிக்கும் வரை எந்த உணவையும் உட்கொள்ளாமல் விநாயகரை நினைத்திருந்து பூஜையைத் தொடங்க வேண்டும். விநாயகரிடம் நான் என்னுடைய சதுர்த்தி விரதத்தை முறைப்படி அனுஷ்டிக்கப் போகிறேன். 


எனவே நீ எந்தவித தடைகளும் இல்லாமல் அருள்புரிய வேண்டுகிறேன் என பிரார்த்தனை செய்து கொள்ள வேண்டும். பின் தங்கத்தாலோ அல்லது தாமிரத்தாலோ அல்லது படத்திலோ விநாயகர் செய்து பூஜை செய்ய வேண்டும். விதிமுறைப்படி நெய், சர்க்கரை, எள் சேர்த்த கொழுக்கட்டைகளைத் தயாரித்து கொண்டு விநாயகருக்கு நிவேதனம் செய்ய வேண்டும். மேலும் தரித்திரம் நீங்க வேண்டும் என்று விரும்புகிறவர்கள் தங்கள் சக்திக்கேற்றவாறு காலணி, குடை, பசு மாடு ஆகியவற்றை தானம் செய்யலாம். அன்னதானம் செய்வது சிறப்பு. 

இவ்வாறு பூஜை செய்து வந்தால் விநாயகப் பெருமான் கட்டாயம் வேண்டிய வரங்களைத் தருவார். விநாயகர் சதுர்த்தியை மிகவும் சிரத்தையுடன் கடைபிடிப்பவர்கள் சிறந்த கல்வி அறிவும், தெளிந்த ஞானமும், சிறந்த செல்வமும், பிள்ளைப் பேறும் துன்பங்கள் விலகி இன்பமும் பெறுவார்கள். விநாயகருக்கு உகந்த நாட்கள் திங்கள் மற்றும் வெள்ளிக்கிழமையாகும். 


திதிகளில் சதுர்த்தி திதி அவருக்கு உகந்த திதியாகும். குடும்பத்தில் சண்டை, சச்சரவுகள் ஏற்படாமலிருக்க மோதக நிவேதனம் செய்ய வேண்டும். துன்பங்கள் சிதறி ஓட சிதறு தேங்காய் உடைக்க வேண்டும். சனி அவரைப் பிடிக்க வரும் பொழுது, ‘இன்று போய் நாளை வா’ என்று எழுதி வைக்க சொல்லி தந்திரத்தைக் கையாண்ட தலைவன் விநாயகனாகும். அப்படிப்பட்ட விநாயகருக்கு உகந்த சதுர்த்தியில் விரமிருந்து அவரை வழிபட்டால் செல்வச் செழிப்பு மேலோங்கும். தொழில் வளம் பெருகும். மக்கட்பேறு கிட்டும். 

காரிய வெற்றி உண்டாகும். புத்தி கூர்மை ஏற்படும். நல்ல வாழ்க்கை அமையும். எள்ளுருண்டையை நிவேதனம் செய்தால் சனி பகவானின் பாதிப்பிலிருந்து விடுபட இயலும். தோப்புக்கரணம் போடுவதால் மூட்டுகால் வலிமை பெற்று ஆரோகிக்யத்தை வழங்கும்.

சதுர்த்தி விரத நாளில் ஏழு விநாயகர் கோவில்களுக்குச் சென்று ஏழு தேங்காய்கள் உடைப்பது (சதுர் தேங்காய்) மிகவும் சிறப்பு.






ஓம் கம் கணபதயே நமஹ...!!

தென்னாடுடைய சிவனே போற்றி…!
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி…! போற்றி…!!
மேன்மைகொள் சைவநீதி . . . !
விளங்குக உலகமெல்லாம் . . . !
இன்பமே சூழ்க . . . !
எல்லோரும் வாழ்க . . . ! 


 "திருச்சிற்றம்பலம்" '' திருச்சிற்றம்பலம்'' "திருச்சிற்றம்பலம்''