Tuesday, May 13, 2014

திருவெண்காட்டில் சித்திரா பௌர்ணமி !!! (14.05.2014)

                         

பிரசித்தி பெற்ற விழாவான சித்ரா பவுர்ணமி, நாளை விமரிசையாக நடைபெற உள்ளது. அதையொட்டி, சித்ரா பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம் நாளை (14ம் தேதி) அதிகாலை 1.53 மணிக்கு தொடங்கி, 15ம் தேதி அதிகாலை 1.03 மணிக்கு முடிகிறது.

சித்திரை மாதம் வரும் பௌர்ணமிக்கு சில தனிச் சிறப்புக்கள் உள்ளன. மாதம் தோறும் வரும் பௌர்ணமி நாளில் மலைக்கோவில்களுக்குச் சென்று மக்கள் கிரிவலம் வருகின்றனர். எனினும், சித்திரைப் பௌர்ணமியன்று கிரிவலம் வருதல், கோவில்களிலும் புனிதத்தலங்களிலும்தம் குடும்பத்தாருடன் பொங்கல் வைத்தல் போன்றன சிறப்பானவையாகும்.

சித்திரைப் பௌர்ணமியானது, சித்திரகுப்தனாரின் திருமண நாளாகும். அவரது திருமண நாளான சித்திரா பௌர்ணமியன்று பொங்கலிட்டும் கிரிவலம் வந்தும் இறைவனை வழிபடும்போது, சித்திர குப்தனை மனதில் நினைத்து ” நாங்கள் மலையளவு செய்த பாவங்களை கடுகளவாகவும் கடுகளவு செய்த புண்ணியத்தை மலையளவாகவும் எழுதிக்கொள்” என வேண்டி வழிபட வேண்டும்.

                   

சித்திரா பௌர்ணமியில் சித்திரை நட்சத்திரமும் பௌர்ணமி திதியும் சேர்ந்து வருவதால், அன்று கடலில் நீராடுவது மிகவும் சிறப்பானதாகக் கூறப்படுகின்றது. ஏனெனில் அன்றைய தினம் கடலில் நீராடுபவர்களின் பாவங்களை கழித்தும் சிலவற்றை தாமே ஏற்றுக்கொள்ளவும் அங்கே பிரசன்னமாகியுள்ள பித்ருக்கள், மகரிஷிகள், சித்த புருஷர்கள், யோகியர்கள் தயாராக இருப்பார்களாம்.   

சித்ரா பௌர்ணமி அன்று காலையில் பூஜை அறையில் விநாயகர் படத்தை வைத்து ஒரு பேப்பரில் ”சித்திர குப்தன் படியளப்பு” என்று எழுதி வைக்க வேண்டும். சர்க்கரைப் பொங்கல் அல்லது வெண் பொங்கலை வைத்து படைக்க வேண்டும். படையலுடன் மாங்காய், தேங்காய், பலவகை காய்கறிகள், பருப்புகள் , தயிர் கடையும் மத்து, உளி போன்றவற்றையும் வைக்க வேண்டும். 

இந்த வழிபாட்டின்போது ”சித்ரா குதம் மஹா ப்ராக்ஜம் லேகணீ பத்ர தாரிணம் சித்ர ரத்னாம் பரதாரம் மத்யஸ்தம் சர்வ தேஹினாம்” என்ற மந்திரத்தைக் கூறி சித்ர குப்தனை வழிபட வேண்டும் என்பது ஐதீகம்.

சித்திரா பௌர்ணமியும் அதன் சிறப்பும் - சித்திர புத்திரனார் வரலாற்றையும் பார்வையிட இங்கே அழுத்தவும்